திங்கள், 24 ஜூன், 2024

 

ஏழாம் அறிவு

(எண்சீர் விருத்தம்)

 

மூவிடத்துச் சங்கமதில் முறையாகக் கொழுவேற்று

முதுமொழியாய் முகம்கொண்டு முத்தமிழாய் வளங்கொழித்து

நாவினிலே நடம்புரியும் நறுந்தமிழின் இலக்கணத்தில்

      நானிலத்தை ஐந்தாக்கி நல்விதிகள் தீட்டினாலும்

பூவுலகில் வாழுகின்ற புலப்படாத உயிர்களுக்கும்

புலனறிவு முதற்கொண்டு பகுத்தறிவு ஈறாக

ஈவுடனே இனம்பிரித்து எளிமையுடன் உரைத்தாலும்

எம்மினத்தார் இவ்வேழாம் அறிவினையும் எட்டுகின்றார்

 

நுண்ணறிவு நுட்பத்தை நுணுக்கமுடன் நுகர்கின்ற

நோக்கத்தின் நுழைபுலமாய் விளங்குகின்ற நேர்த்தியினை

எண்ணில்லாச் செயலிகளாய் இணையத்தில் ஏற்றுகின்ற

ஈடில்லா இளையோரின் எழிலார்ந்த எழிச்சியிலும்

பண்பாட்டு வழிமுறையில் பண்பட்டு வந்தோர்க்குப்

பகுத்தாய்வுப் படிப்பினையைப் பறைசாற்றும் பாங்கினிலும்

விண்தொட்ட வீரியத்தை வெவ்வேறு வடிவாக

விளக்குகின்ற வெற்றிகளே இவ்வேழாம் அறிவாமே!

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக