திங்கள், 13 நவம்பர், 2017

மானிடனின் - மனிதம்

கள்ளமில்லா மனிதனிடம் அவன்
வெள்ளைமனம் காண மழை
வெள்ளமெனப் பாய்ந்துவந்து மனித
உள்ள மெல்லாம்  ஈரமாகக்
கொள்ளளையிட்டுச் சென்றதிந்த இயற்கை
பிணம் தின்னும் கழுகு

மனத் தீயின் வெப்பம்
அடங்கிவிடாமல் இருக்க கேவும்
உணர்வுகளுக்கு தீனியாக நான்

அத்தனை இடர்களையும் கடந்து
வந்தேறியக் கரையில் பிணம்
தின்னும் கழுகு காத்திருந்தது

அதன் கூரிய அலகில் சிக்கிய
இறைச்சி துண்டை நகத்தில்
கிழித்துக் கொண்டே என்னைப்
பாத்தது

நான் பயந்து ஓடாமல் அதையே
பார்த்து நின்றிருந்தேன்.
                     
                                          எம். கருணாகரன்

இந்தக் கவிதை வரிகளைப் படித்தபொழுது என்னுள்  எழுந்த எண்ண அலைகளை என் பார்வையாகவே பதிவிடுகின்றேன். அதாவது, 'மனத்தின் தீ அடங்கிவிடாமல் இருக்க' என்ற வரியைப் படிக்கும்போதே அந்த வரிக்குரியவர் ஏதோ ஒரு பெரிய பாதிப்பையோ அவமானத்தையோ துன்பக் கடலாகப் பெற்றிருக்கிறார் என்பதையும் அதை எளிதில் மறக்கமுடியாமல் தவிக்கும் தவிப்புக்குத் தீனியாகத் தன்னையும் தன் உணர்வுகளையும் ஒப்படைத்தவர் என்பதையும் உணரமுடிகின்றது.
இருப்பினும், 'அத்தனை இடர்களையும் கடந்து வந்தேறியக் கரையில் பிணம்தின்னும் கழுகு காத்திருந்தது' என்ற வரிகள், அந்தத் துன்பக் கடலிலிருந்து தன்னைத்தானே மீட்டெடுத்துக் கொண்டு கரையேறிய இடத்திலும் வேறொரு வடிவில்  நம்பியவராகவோ நம்ப வைத்துக் கழுத்தறுப்பவராகவோ காத்திருந்திருக்கலாம்.
அந்தக் காத்திருப்பு எப்படி இருந்ததாகக் கூறுகிறார் தெரியுமா? 'அதன் கூரிய அலகில் சிக்கிய இறைச்சி துண்டை நகத்தில் கிழித்துக் கொண்டே என்னைப் பார்த்தது' என்கிறார். அதாவது, வா! மகனே! வா! இவ்வளவு மனத்துன்பத்திலும் இருந்து மீண்டுவிட்டாயா? உன்னை நான் அவ்வளவு சீக்கிரமாக விடமாட்டேன் என்று கையில் புதிய பிரச்சினையோடு நின்று பார்ப்பதாகக் கூறுகிறார். இதில் முத்தாய்ப்பு என்னவென்றால் தன்னுடைய கவிதையின் கடைசி வரியில் 'நான் பயந்து ஓடாமல் அதையே பார்த்து நின்றிருந்தேன்'  என்று முடித்திருப்பார். அதாவது, நான் எவ்வளவோ துன்பங்களையும் பிரச்சினைகளையும் பார்த்தவன் நீயெல்லாம் எம்மாத்திரம் என்று அந்தப் பிணம் தின்னும் கழுகைப் பார்த்துக் கேட்பதுபோல் முடித்திருப்பதாக உணர்கிறேன். கவிஞருக்கு நன்றி.