திங்கள், 29 ஜூன், 2015




புத்தாண்டு வருகுதுபார்

புத்தாண்டு வருகுதுபார் தமிழ்

      புத்தாண்டு வருகுதுபார்

முத்தான தை’யினிலே தமிழ்

      முடிசூடி வருகுதுபார்


எண்ணமதில் குடிகொண்ட உயர்

      இனியதமிழ்ப் பாட்டோடு

பண்பாட்டுப் பெட்டகமாய் தைப்

      பொங்கலன்று வருகுதுபார்

நன்செய்யுள் திருக்குறளை உயர்

நாடுபோற்ற செய்ததமிழ்

பொன்னாண்டைக் கூட்டியிங்கு உயர்

புதுப்பொலிவு தருகுதுபார்

கன்னித்தமிழ் வையகத்தில் உயர்

      கலைகள்பல கொண்டிங்கு

வண்ணத்தமிழ்ப் புத்தாண்டாய் உயர்

      வையகத்தில் வருகுதுபார்

நன்னாளாம் புத்தாண்டில் உயர்

      நல்லவர்கள் வாழ்த்திடவே

என்னாளும் பொன்னாளாய் உயர்

      ஏற்றமுடன் வருகுதுபார்

                        பொன். கணேசுகுமார்

                        சிங்கப்பூர்.

 
அவர்தாம் பெரியார்

பகுத்தறிவு பகலவராம்

      பார்போற்றும் தூயவராம்

வகுத்தநெறி வழுவாது

      வாழ்ந்திட்ட பெரியவராம்

 
அறியாமை இருளகற்ற

      ஆண்டவனை மறுத்தவராம்

வறியோரைச் சுரண்டுகின்ற

      வஞ்சகரைப் பழித்தவராம்

 
பெண்ணடிமை விலங்கொடிக்க

      பெரும்புரட்சி செய்தவராம்

தன்னவளை முன்னிருத்தி

      சமதர்மம் புரிந்தவராம்

 
வன்மனத்தார் சடங்கினையே

      வரம்பின்றி எதிர்த்தவராம்

தன்மான உணர்வுதனை

      தமிழருக்குக் கொடுத்தவராம்

 
சிங்கநிகர் ஆற்றலினால்

      சிறுமைகளைத் துடைத்தவராம்

தங்கநிகர் கொள்கைகளைத்

      தரணியெங்கும் விதைத்தவராம்

 
வெண்தாடி வேந்தரென

      வெகுமானம் பெற்றவராம்

பண்பாடிப் போற்றுகின்ற

      பரம்பொருளே பெரியாராம்

                                          பொன். கணேசுகுமார்

                                          சிங்கப்பூர்.