ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

தும்பிகளின் வெளி.

இதயங்களை கிழித்து வைத்து கொள்ளலாம்
ஒழிகியோடும் குருதிப் புனலில்
கெக்கெலிக்கலாம்
ஓரினக் கூட்டத்தின்
வெற்று வெற்றி ஓலம்

யாரும் முன் நிறுத்த முடியாத செயல் கூட்டில்
எங்கும்
விரவி கிடக்கும் மனப் புழுக்கம்
ஈரம் காய காலக் கெடு
அறுதியிட்டு கூற இயலாது

சேர்த்து கையிறுக்கி சொல்லுவோம்

எந்தப் போரும் வாழ்வை திருத்தி அமைக்காது

கை கால் இழந்த உயிரிகளை
பூமியெங்கும் சிதறி வைக்கும்.

எம்.கருணாகரன்


கவிஞர் கருணாகரன் அவர்களின் தும்பிகளின் வெளி என்னும் கவிதை பற்றிய என் எண்ண வெளிப்பாடுகள்.
கவிஞர் கருணாகரன் அவர்களின் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் ஆசையின் வெளிப்பாடாக மட்டுமல்ல இவ்வுலக வாழ் மனிதர்களில் பெரும்பாலனோரின் ஆசையாகவும் இந்தக் கவிதை வரிகளை வடித்துள்ளார். இந்த உலகில் எத்தனையோ இனங்கள் இருந்தாலும் அவ்வினங்களில், இக்கருத்தினைச் சொல்ல நம் தமிழினத்திற்கு மட்டும்தான் அதிக அனுபவம் இருக்கிறது. ஏனென்றால், நம் இனம் பட்ட வலிகளும் வேதனைகளும் ஏராளம் ஏராளம். நம் இனத்தார் யாம் பெற்ற இன்பத்தை மட்டுமே மற்றவர் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால், தான் பெற்ற துன்பத்தை மற்றவர் அனுபவிக்க எண்ணார். எனவேதான் நம்மினக் கவிஞருக்கும் அந்த எண்ணம் தோன்ற போரினால் ஏற்படும் விளைவுகளைக் கவிதையாய் வடித்துள்ளார். கவிஞருக்கு என் நன்றியுடன் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
இப்படிக்கு,

கணேசுகுமார் பொன்னழகு.
ஆசிரியர்


உரியோர் பெரியோர் உதிர்த்திட்ட

      உயர்ந்த எண்ணக் கருத்தோடு

அரிய பெரிய ஆற்றலையும்

      அமுதாய் ஊட்டும் ஆசிரியர்


கற்றுத் தெளிந்த கல்வியினை

      காலம் நேரம் பாராது

கற்றுக் கொடுக்கும் கண்ணியமே 


      கடமை தவறா ஆசிரியர்



கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.

                 பெண் 
நேற்று இன்று நாளை 


அன்று...


கல்லூரிப் பருவத்தில்

      கனவென்னும் நித்திரையில்

உல்லாசப் பார்வையாலே

      உலாவந்த பெண்ணணங்கே


இன்று...


வாழ்வென்னும் சோலையிலே

      வசந்தத்தைப் பரப்பிடவே

சூழ்கொண்ட மலராகச்

      சுற்றிவரும் பைந்தொடியே 


நாளை...


களைப்புற்ற சந்ததிக்குக்

கனியோடு தண்ணிழலும்

அளிக்கின்ற தருவாக


      அமைந்திட்ட அன்புருவே



கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.


                    தேடல் 


இளஞ்சிறார் நாவினிலே

      இன்தமிழைப் புகுத்திடவே

வளர்தமிழ் இயக்கத்துடன்

      வரைந்திட்ட ஒருதிட்டம்

சங்கத்தமிழ்ச் சாற்றினையே

      சகலரும் அருந்திடவே

சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கம்

      சிறப்புடனே நடத்துகின்ற

தேடலென்னும் நிகழ்ச்சியில்

      தெவிட்டாத தேன்தமிழை

நாடுகின்ற மாணவர்காள்

      நலமுடனே ஒப்படைத்தார்.


கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.


ஆசிரியர் தின வாழ்த்துகள்!


அன்பை அரணாய்க் கொண்டிங்கு
அறிவு புகட்டும் ஆசிரியர்  
பண்பும் பணிவும் தலைத்தோங்க
பரிவை முதலாய்க் கற்பிப்பார்
என்னை உன்னைக் கொண்டிங்கு
      இயங்கு கின்ற வகுப்பறையில்
கன்னித் தமிழால் போதித்துக்
கண்ணிய வாழ்வைப் புகுத்திடுவார்      

நாடும் வீடும் போற்றுகின்ற
நல்ல பண்பை ஊட்டிடவும் 
வாடும் பிள்ளை முகமறிந்து
வாட்டம் போக்கச் செய்திடவும்
பாடும் குயிலின் இராகத்தில்
படிக்கும் பாடம் செய்திடுவார்
வீடு பேரு அடைந்திட்ட
வீரர் கதையும் சொல்லிடுவார்

நானும் நீயும் நம்மவரும்
நலமாய் என்றும் வாழ்ந்திடவும்
மேன்மை கொண்ட மறைதன்னை
      மேதினில் கொண்டு ஒழுகிடவும்
வானும் மண்ணும் பொய்த்தாலும்
வறுமை போக்கத் தெரிந்திடவும்
நானிலம் போற்றும் நல்லறத்தை
      நயம்பட நமக்கு உரைத்திடுவார்

மாண்புறு கொண்ட மானிடரில்
      மதிப்புப் பெற்ற ஆசிரியரே
பேணும் பெற்றோர் இருவருக்கும்
அடுத்த நிலையில் விளங்கிடுவார்
வானில் தோன்றும் வளர்நிலவின்
      வறுமை யில்லாக் குளிரொளிபோல்
காணும் பிள்ளை யாவர்க்கும்
      கருணை யொளியாய்த் தெரிந்திடுவார்

கற்றுத் தேர்ந்த கல்வியோடு
      கேட்டுத் தெளிந்த அறிவினையும்
கற்றுக் கொடுக்கும் ஆசிரியரைக்
      கண்ணாய்க் கருதும் நம்மினத்தில்
உற்றோர் பெற்றோர் உடனிருக்க
ஒருங்கே குவித்த கரம்கொண்டு
பற்றுக் கொண்ட பாசத்தால்
      பணிவு கொண்டு போற்றிடுவோம்


கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.