புதன், 1 மே, 2019

"புது புது தொடக்கங்கள்"

நாளை விடியும் பொழுதை
நம்பி வாழும் உயிர்க்கு
காலை மாலை யென்று
கரைந்து மலரும் பொழுதும்
வேளா வேளை யென்று
விரைந்து முடியும் நாளும்
பாலை வார்க்கும் பொழுதாய்ப்
பாரில் தோன்ற வேண்டும்

விதியை நொந்து பேசும்
வீணர் இருக்கும் வரையில்
மதியின் மேன்மை யறிந்து
மகிழ்ச்சி கொள்வ தேது
புதிய புதிய தொடக்கம்
புகுத்த நினைக்கும் மனிதா
புதுமை எண்ணம் கொண்ட
புரட்சிப் பாதை திறக்கும்

திறமை கொண்ட மக்கள்
திராணி யற்று வாழும்
வறுமை நிலையைப் போக்கி
வளத்தைச் சேர்க்கும் புதுமை
பெருகி வளர்ந்து வந்தால்
பஞ்ச மெல்லாம் தீர்க்கும்
பொருள்கள் வந்து குவிய
 பூமி மாற்றம் காணும்