வியாழன், 25 அக்டோபர், 2018



ஜீவா! ஜீவா! ஜீவா!

கண்கொண்டு பார்க்குமுன்னே
     காரிருள்தான் வந்ததென்ன? -  ஜீவா
உண்மையுள்ள இளையவன்நீ
     உலகைவிட்டு போனதென்ன?

உதிராத உறவாக
     ஊர்கூடி வாழ்ந்தாலும் - ஜீவா
மதியாட வைத்துவிட்டு
     மறைந்துநீ போனதென்ன?

நேற்றுவரை வாழ்ந்தஉன்
     நினைவோடு வந்தசோகம் - ஜீவா
காட்டாற்று வெள்ளம்போல்
     கரைபுரண்டு ஓடுதைய்யா

எண்ணத்தை இழையவிட்டு
     எங்குநாம் பார்த்தாலும் - ஜீவா
கண்ணத்தை நனையவைக்கும்
     கண்ணீர்தான் பெருகுதைய்யா

ஆண்டொன்று போனதென்று
     அடுத்தவர்கள் சொன்னாலும் - ஜீவா
மீண்டுமொரு பிறவியோடு
     வீடுவந்து சேருமைய்யா


ஓ!வண்டினமே!

கள்ளிருக்கும் பூவினிலே
     கால்பதிக்கும் வண்டினமே
உள்ளிருக்கும் மதுவுண்டு
     ஊர்சுற்றி வரலாமோ

கன்னிமொழிப் பிள்ளைகளும்
     களமாடும் மறவர்களும்
உன்னோடும் உறவாட
      ஒருபொழுது வந்திடுமோ

என்னினத்து மக்களங்கே
     எரிகனையில் வீழ்ந்தகதை  
சொன்னாலும் கேட்பதற்கு
     சுரனையுள்ள ஆளில்லை

புல்லுருவி கூட்டமொன்று
     புழுதிவாரி கொட்டியதால்
உள்ளமின்று படும்பாட்டை
     உனக்குநான் உரைத்திடுவேன்

வன்கொடுமை செயல்கண்டு
     வாயடைத்துப் போனதனால்
என்னிருக்கும் சோகமொன்று
     எரிதழலாய் வாட்டுதிங்கே

வன்னிவயல்ப் பரப்பெங்கும்
     வான்வெளிக் குண்டுகளால்
புன்னாகிப் போனகதை
     புகல்கின்றேன் கேட்பாயோ

கள்ளமில்ல புன்சிரிப்பில்
     கரைபுரண்ட தமிழினமோ
எல்லையில்லா துன்பத்திலே
     ஏதுமின்றி தவிக்குதுபார்

இமயத்தில் கொடிநாட்டி
     இருமாந்த நம்மினமோ
இமைமூட வழியின்றி
     ஏங்கித்தான் தவிக்குதுபார்

நரவேட்டை யாடுகின்ற
     நாதாரிக் கூட்டமொன்று
நறுந்தமிழர் ஈழத்தில்             
     நம்மினத்தை அழித்ததுபார்

புறமுதுகு காட்டாது
     புலியாகப் பாய்ந்தஇனம்
புறம்போற்றும் நானூறின்
     பொற்சுவடாய் ஆனதுபார்

               பொன். கணேசுகுமார்
                   சிங்கப்பூர்

வியாழன், 18 அக்டோபர், 2018

கண்ணதாசன் பாட்டு - எண்சீர் விருத்தம்


கண்ண தாசன் உள்ளம் கண்டதெல்லாம்
                  காட்சி யாகும் கலையின் வடிவமாகும்
எண்ணி முடிக்கும் முன்னே எழுதிடுவார்
                 ஏழு கட்டை யிசைக்கு வித்திடுவார்
கண்ணில் தோன்றும் யாவும் அவருக்கு
                  ஒலியின் வடிவாய் வந்த சொல்லாகும்
தன்னில் தோன்று வதெல்லாம் கருத்தாகும்
                தரத்தில் உயர்ந்த நல்ல பாட்டாகும்

புதன், 17 அக்டோபர், 2018

கண்ணதாசன் பாட்டு 3 - சமனிலைச்  சிந்து


சிறுகூடல் பட்டிதன்னில் பிறந்தவர் - தம்
சொந்தத்தில் மகனாக வளர்ந்தவர்
சிறுவயதில் குறும்புபல செய்தவர் - தம்
சேட்டைக்குத் தண்டனையும் பெற்றவர்

சிந்தையிலே செந்தமிழைக் கொண்டவர் - உயர்
சிந்திக்கு மாற்றலினால் சிறந்தவர்
சந்தத்தில் சிந்துபல தந்தவர் - பாட்டுச்
சீர்மையிலே சிகரம்போல் நின்றவர்

திரைப்படத்தில் உரையெழுத வந்தவர் - பாட்டுத்
துறையினிலே தொலைதூரம் சென்றவர்
கரைகாணக் கற்பனையை கண்டவர் - மனக்
கணக்கில்லாக் கவிதைகளைத் தந்தவர்

எண்ணத்தின் எல்லைகளைத் தொட்டவர் - தமிழ்
எழுத்துகளில் வண்ணத்தைச் சேர்த்தவர்
பண்பாட்டின் பெரும்பொருளை யறிந்தவர் - நம்
பழந்தமிழின் பெருமையினை யுணர்ந்தவர்

அகப்பாட்டும் புறப்பாட்டும் கற்றவர் - அவற்றை
அனைவருக்கும் எளிதாக்கிக் தந்தவர்
சுகவாழ்வும் சுமைவாழ்வும் பெற்றவர் - அவற்றை
சமவாழ்வா யெண்ணியெண்ணி வாழ்ந்தவர்

முத்தமிழின் முதற்பொருளை யுணர்ந்தவர் - அதில்
முக்கனியின் சாற்றினையே சுவைத்தவர்
சித்தரையும் புத்தரையும் படித்தவர் - நல்ல
சிந்தனையில் சீர்தூக்கிப் நடந்தவர்

திங்கள், 15 அக்டோபர், 2018

நகரம் 



ஜூரோங் மேற்காம் எங்கள் நகரம்
சுத்தம் நிறைந்த சிங்கை நகரம்
ஜூரோங் எங்கும் வருவாய் ஈட்டும்
சிறப்பு வாய்ந்த தொழில்களின் கூடம் 

பறவைப் பூங்கா பக்க முண்டு 
பலபல வண்ணப் பறவைக ளுமுண்டு
அறிவியல் பூங்கா அருகி லுண்டு
ஆய்வுப் பொருள்க ளங்கு முண்டு

கப்பல் கட்டும் துறைக ளுமுண்டு
கணக்கி லடங்கா வருவா யுமுண்டு
கப்பலை யுடைக்கும் கரைக ளுமுண்டு
காணக் கிடைக்கா காட்சிக ளமுண்டு



2017 ஆம் ஆண்டு கண்ணதாசன் வெண்பா


கன்னித் தமிழோடு கன்னல் சுவைகூட்டிப்
பண்பட்ட சொற்களால் பாவடித்த - மன்னவன்
கண்ணதாச னென்னும் கவிதைத் தலைமகன்
குன்றாப் புகழ்கொண்ட குன்று.
கண்ணதாசன் வெண்பா 2


மெட்டுக்குப் பாட்டெழுத முன்னெடுக்கும் நேரத்தில்
கட்டுக்கு ளில்லாத  காட்சிகளும் - வெட்டிவைத்த
சித்திரமாய்ச் சீர்பெற்று, சந்தமற்ற சொற்கூட

முத்தான பாட்டாகும் பார்.



தென்பொதிகைத் தென்றலிலே கால்பதித்த வாழ்வியலைத்
தன்பதிப்பாம் தென்றலிலும் தக்கதொரு - முன்னுரையாய்
மென்படுத்திக் கற்பவரும் கேட்பவரும் பண்படவே
கண்ணதாசன் செய்தார்  கவி.


குன்றொத்த வீடும் குறைவில்லா செல்வமும்
நன்றெனச் சொல்லும் நலமான வாழ்க்கையும்
கொண்டாரும் கொள்ளாரும் பாரினி லுண்டெனக்
கண்ணதாசன் பாடினார்நற் பா.



அகமும் புறமும் அமைந்திட்ட வாழ்வைப்
பகுத்தறிவு சிந்தையுள் பாடிச் - சுகமான
சந்தமோடு நல்லறமும் சாற்றியே தந்திட
முந்திடுவார் முத்தையா பார்.



கொஞ்சுதமிழ்ச் சொற்களோடு சிந்தனையும் சேர்ந்திருக்க
பஞ்சு அருணாச் சலமும் துணையிருக்க
விஞ்சுகின்ற கற்பனையில் வித்திட்ட பாட்டுகளை
நெஞ்சினிக்கத் தந்திட்டார் கேள்

கண்ணதாசன் வெண்பா 1


செட்டிநாடு ஈன்றுதந்த கண்ணதாசப் பாவலன்தன்
பட்டறிவு பாட்டறிவு யாவையும் - கொட்டிவார்த்த
கன்னித் தமிழ்பாக்களில் நல்ல கருத்தோடு
பண்பாட்டுக் கூறுகளு முண்டு


ஏட்டிலுள்ள காப்பியமும் காவியமும் சொன்னவற்றைப்
பாட்டாலே பாடியவன் பாமரனுக்கும் - ஊட்டியவன்
கன்னல் மொழியில் நவின்றவன் ஆண்டவனாம்
கண்ணனுக்குத் தாசனாய்த் தேர்ந்து


உன்னத வாழ்வின் உயர்வினை யூட்டிடும்
சின்னஞ் சிறிய தொடராலே - நன்முத்தா
யெண்ணமெல்லாம் ஊற்றெடுக்க இன்பந்தான் தந்திடுமே
கண்ணதாசன் பாட்டின் சுவை


முத்துமுத்தாய்ச் சொல்கொண்ட முத்தையா பாட்டிலே
தத்துவச்சீ ரான சமதர்ம வித்தோடு
பத்துமெட்டும் சேர்ந்த பதினெண் இலக்கியமும்
சத்தூட்டும் சாறாகும் காண்


சங்ககாலப் பாட்டையும் சாத்திரத்தி னேட்டையும்
பங்கமின்றிக் கற்றதனால் பைந்தமிழின் சீர்மையினைத்
தங்கநிகர் பாட்டுகளால் தட்டின்றித் தந்தமகன்
சிங்கத்தின் சீற்றம்போல் பாய்ந்து

ஞாயிறு, 6 மே, 2018


அந்த அவள்...

அறுமூன்று வயதுடைய அழகான பெண்ணவளை

அறுமூன்று திங்களாக அன்புடனே காதலித்தேன்

தெருவோரம் நின்றுநான் தினமொரு மலர்தரவே

பருவமுள்ள பெண்ணவளும் பாசமுடன் வாங்கிடுவாள்.


பலநாள் பழகியவள் பண்புடனே விளங்கியவள்

பலவிடமும் வந்து பலகதைகள் பேசியவள்

செலவில்லா இன்பத்தை சிந்தையில் நிறுத்தியவள்

சிலநாள் வாராது சின்னவனைத் தவிக்கவிட்டாள்!


என்னிடம் கொண்ட எல்லையில்லா அன்பைவிட்டு

கன்மனம் கொண்டகதை எப்படித்தான் நான்மறப்பேன்!

நன்றான குணத்தோடு நான்கிலக்க சம்பளமும்

கொண்டவன் இவனெனக் கூடிவாழப் போனவளை


ஓராண்டு முன்னே ஒளிமங்கும் நேரத்தில்

ஆற்றோர விடுதியிலே அரையிருட்டில் கண்டேன்!

யாராக இருக்குமென யான்மீண்டும் பார்க்க

சீரான வாழ்வைவிட்டுச் சீரற்றே நின்றாள்.


நானருகில் சென்றபோது, நயனத்தை ஈரமாக்கி

நானன்று பிறப்பதற்கு நல்வினை யாற்றியவர்

நானுனை மறப்பதற்கும் நஞ்சுவினை யாற்றியதால்,

நானின்று விடுதியிலே நானிழந்த பாவியானேன்!!




செவ்வாய், 1 மே, 2018


5. தமிழ்மொழி

சேர்ந்தா டம்மா சேர்ந்தாடு!
சிங்கைத் தமிழே சேர்ந்தாடு!
தேர்ந்த மொழியாம் தேன்தமிழைத்
தெரிந்த பாவால் பாராட்டு!

கன்னித் தமிழாம் நம்மொழியைக்
கண்ணின் மணியாய்க் காத்திடவே
எண்ணும் எழுத்தும் இரண்டோடும்
இன்தமிழ் புகுத்தி உரையாற்று!

வானம் பூமி உள்ளவரை
வளர்தமிழ் மொழியும் உண்டென்று
கானக் குயிலின் இசையோடு
      கலந்தே நீயும் புகழ்பாடு!



4 தொடர்வண்டி!

பாப்பா! பாப்பா! தொடர்வண்டி!
பாய்ந்து செல்லும் தொடர்வண்டி!
தாப்பா* இல்லா கதவுகளும்
தானாய் மூடும் தொடர்வண்டி!

எங்கள் நாட்டுத் தொடர்வண்டி!
ஏறிச் செல்ல ஏற்றவண்டி!
சிங்கை எங்கும் சென்றாலும்
சிறப்பாய்ப் பயணம் செய்திடலாம்!

காலை மாலை வேளையிலும்!
கடிதாய்ச் செல்லும் தொடர்வண்டி!
நாளை மாலை நாம்சேர்ந்து
நலமாய்ச் செல்வோம் வாரீரோ!


3. நட்பு

நட்பு நல்ல நட்பு!
      நன்மை செய்யும் நட்பு!
நட்பு இல்லா மனிதரை
      நலியச் செய்யும் நட்பு!

உயர்வு தாழ்வு பேதமின்றி
      உயிராய்ப் பழகும் நட்பு!
அயர்வு கொண்ட போதிலே
      ஆறுதல் தந்திடும் நட்பு!

கள்ளம் கபட மற்று
      கனிவாய்ப் பழகும் நட்பு!
உள்ளம் மகிழத் தானே
      உண்மை பேசும் நட்பு!


2. புத்தகம்

புத்தகம் நல்ல புத்தகம்!
      புதுமை நிறைந்த புத்தகம்!
புத்தம் புதிய எண்ணத்தைப்
      பதிய வைக்கும் புத்தகம்!

கருத்து விளக்கப் படங்களும்
கற்பனை நிறைந்த கதைகளும்
பொருத்த மிக்க வண்ணத்தில்
      பொதிந்து நிற்கும் புத்தகம்!

கற்றுக் கொடுக்கும் நீதியும்
கருணை கொண்ட உள்ளமும்
பெற்றுத் தந்த புத்தகம்!
பெருமை சொல்லும் புத்தகம்!


1. பள்ளி

கல்வி கற்கும் நாமெல்லாம்
கருத்தில் ஒன்று கூடவே
பள்ளிக் கூடம் போகலாம்!
      பாடந் தன்னைப் படிக்கலாம்!

சின்னஞ் சிறுவர் பலருமே
சேர்ந்து படிக்கும் பள்ளியில்
அண்ணன் தம்பி போலவே
அன்பாய்ப் பழகிப் மகிழலாம்!

கன்னித் தமிழைக் கற்கவும்
கலைகள் பலவும் அறியவும்
எண்ணம் கொண்டு நாளுமே
எழிலாய் கல்வி கற்கலாம்!


முடிவில் ஒன்று தொடரலாம் 30/04/2018


கெடுதல் இல்லா மனத்தோரே

உடைமை என்ற உரிமையை

எடுத்துக் காட்டி உரையாற்ற

கொடுத்து வைத்தவர் யாரோ


முடிவில் ஒன்று தொடரலாம்

தொடரும் ஒன்று முடியலாம்

நடுவில் வாழும் காலத்தே

கடமை யாவும் முடிக்கலாம்




தலையில்லா வீரன் 29/04/2018


நெஞ்சுக் கூட்டிலே வீரம்சொரிய

பிஞ்சுக் கரத்திலே வாளேந்தி

அஞ்சாமை யென்னும் உரமேற்றி

வஞ்சகர்முன் போர் செய்தயோ


களமாடும் வேளையிலே உந்தன்

தலைகீழ் நோக்கி வீழ்ந்தாலும்

வலக்கரம் ஏந்தும் வாளால்

குலப்பெருமை காக்க வந்தவனோ


தலையே போன பின்னும்

நிலைதன்னை கொஞ்சமும் மாற்றாது

பரியின் கடிவாளம் பிடித்து

வரிப்புலி வேங்கை போல


வாளெடுத்து சுழற்றும் உன்னை

வாழ்த்தவே வார்த்தை யில்லை

கண்ணை மீண்டும் கண்ணீரால்

வணங்கிடுவே னுந்தன் தாளை



வரிசை 28/04/2018

எந்த நாட்டில் பிறந்த போதும்

சொந்த பந்தம் ஏது மின்றி

நொந்த வாழ்க்கை வாழ்ந்த போதும்

வந்த நாட்டின் விதிகள் ஏற்றே


சிங்கை யென்னும் நாடு பெற்ற

மங்காப் புகழை மனத்தி லேந்தி

எங்கள் வாழ்வும் வளர்ச்சி காண

எங்கும் நிற்போம் வரிசை முறையில்


சிறிய நாடு எனினும் மக்கள்

வறுமை பெருமை பேத மின்றி

வரிசை வரிசை யாக நின்று

வரவு செலவு செய்யும் நாடு




அவனுடைய வெட்கம் – 27/04/2018


அவனுடைய வெட்கம் ஆம்

ஆணினுடைய வெட்கம்

பிஞ்சுக் குருத்தைப்

பிச்சுத் தின்று

பெருமை பேசிடும்

பித்தரைக் காண்பதும்


என்மதம் பெரிது

உன்மதம் சிறிது

எனவுளறி எக்களிக்கும்

எத்தரைக் காண்பதும்


காக்கும் கடவுளையும்

காட்சிப் பொருளாக்கிக்

காசுக்காய் விலைபேசும்

கயவரைக் காண்பதும்


காரியங்க ளாற்றிடவே

கையூட்டுக் கேட்கின்ற

கேடுகட்ட அதிகாரியைக்

கண்ணெதிரே காண்பதும்


பெண்ணென்றும் பாராமல்

போதைப் பொருளாய்ப்

புழங்கிட எண்ணும்

புல்லரைக் காண்பதும்


பாடசாலை சென்று

படிக்கின்ற வயதினிலே

பசிக்காகத் தொழில்செய்யும்

பாலரைக் காண்பதும்


அவனுடைய வெட்கம் ஆம்

ஆணினுடைய வெட்கம்