சனி, 5 டிசம்பர், 2020

பிரியா விடை 


மூவாண்டு காலமாக

முத்தமிழின் வளர்ச்சிக்கு

ஆவலோடு பணியாற்றி

அடையாளங்கள் செய்துவைத்தீர்


நிலையத்தின் வளர்ச்சியிலும்

நீண்டதொரு பங்காற்றிக்

கலையாத நினைவுகளைக்

காலத்திற்கும் கொடுத்துவிட்டீர்


இப்படிக்கு

கணேசுகுமார் பொன்னழகு

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்.

 

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

ஆம்! தமிழ்நாட்டின் தென்பகுதியில் பிறந்து இன்று கோடிக்கணக்கான மக்களின் மனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நம் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள். இவர் இளைஞர்களின் கனவு நாயகனாகவும் விளங்குபவர். இந்தியாவின் விண்வெளி ஆய்வை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றவர். அதுமட்டுமல்லாமல் இந்திய நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்ததோடு முக்கிய தலைவராகவும் வலம்வந்துள்ளார். அத்தகைய ஓர் ஒப்பில்லா மனிதரைப் பற்றிப் பேசப் போகிறேன்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தையார் ஜைனுலாப்தீன். தாயார் ஆஷியம்மா என்பவர்கள் ஆவர். அப்துல் கலாம் அவர்கள் சிறு வயதிலேயே தன் குடும்பத்தின் நிலையை உணர்ந்து தந்தையின் படகுத்தொழிலில் உதவி செய்வது வீடு வீடாகச் சென்று செய்தித்தாள் போடுவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வந்தார்.

அப்துல்கலாம் அவர்கள் இராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்தார். இவர் படிப்பில் சாதாரண மாணவராகத் திகழ்ந்தாலும் தான் படித்தவற்றைச் சிந்தித்து செயல்படுத்தும் திறன் பெற்றவர். இந்தச் சிந்தனையாற்றலே இவரைப் பிற்காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக உருவாக்கியது எனலாம். இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் 1954ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பின்னர், 1955ஆம் ஆண்டு சென்னையில் விண்வெளி ஆய்வு குறித்த பொறியியல் படிப்பில் சேர்ந்து முனைவர் பட்டமும் பெற்றார்.  

அப்துல்கலாம் அவர்கள் தனது பொறியியல் படிப்பினை முடித்ததும் 1960ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில்(DRDO) சேர்ந்து பணியாற்ற துவங்கினார். அப்போது அவர் இந்திய ராணுவத்திற்காகச் சிறிய ஹெலிகாப்டரைத் தயாரித்ததன்மூலம் பலரின் பாராட்டுகளைப் பெற்றார். பிறகு அவர் 1969ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO) சேர்ந்து செயற்கைகோளினை விண்ணிற்கு ஏவும் SLV – III ஏவுகணையை வடிவமைக்கும் குழுவிற்குத் தலைவரானார். இந்த SLV – III ஏவுகணை “ரோகினி” என்ற செயற்கைகோளினைத் தாங்கி விண்ணில் பாய்ந்து வரையறுக்கப்பட்ட பாதையில் வெற்றிகமாகச் சென்று இலக்கினை அடைந்தது. அந்த அளவிற்கு உலகம் கண்ட ஒரு முற்போக்குச் சாதனையினை நிகழ்த்திக்காட்டினார் கலாம். அடுத்ததாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளின் அச்சுறுத்தலினை மீறி அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி இந்தியாவின் வலிமையினை உலகிற்கு நிரூபித்தார்.

சுதந்திர இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக 2002ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார். அன்றிலிருந்து 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் அவர் குடியரசுத்தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் சிறந்த ஆய்வாளர் என்பதனையும் தாண்டி உயர்ந்த தலைமைப் பண்புடைய மூத்த குடிமகனாகவும் விளங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கே எல்லா நிலை மாணவர்களையும் வரவழைத்து அவர்களுடன் உரையாடி மகிழ்வார்.

அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் மீது அளவில்லா அன்பும் அக்கரையும் கொண்டவர். இவர்கள்தான் வருங்கால இந்திய நாட்டை வழிநடத்தக்கூடியவர்கள் என்று நம்பினார். அதனாலேயே குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த விலகிய பின்பும் பல்வேறு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று மாணவ மாணவிகளையும் இளம் ஆய்வாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களிடமும் இளையர்களிடமும் கலந்துரையாடினார். அந்தக் கலந்துரையாடலின்போது, அவர்களிடம் நல்ல உயர்ந்த இலட்சியங்களை மனத்தில் கொண்டு கனவு காணச் சொன்னார்.

அப்துல் கலாம் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். அவருடைய மறைவு இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் எழுதிய நூல்களில் அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள் போன்ற நூல்கள் முக்கியமானவையாகும்.

அப்துல் கலாம் அவர்கள் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றிருந்தாலும் அவர் இளையர்களிடத்தில் விதைத்துள்ள கனவுகளும் நம்பிக்கைகளும் தொடர்ந்து ஈடேறும் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்.

 

 

அப்துல் கலாமென்னு மறிஞர்


அன்பின் வடிவமாய்த்தி கழும்நம்

அப்துல் கலாமென்னு மறிஞர்

முன்பு தான்கண்ட கனவை

முடித்துக் காட்டியநன் முனைவர்

நன்றாய் இளையரோடு பேசி

நலத்தைப் போதிக்கும் மனிதர்

சின்னஞ் சிறுவரோடும் சேர்ந்து

சிரித்துப் பழகுகின்ற தலைவர்

 

இராம நாதபுர மருகில்

இயற்கை சூழ்ந்தநற் றீவில்

கிராமம் சூழ்ந்தநக ராகக் 

கிழக்கு நோக்கிடவீற் றிருக்கும்

இராமன் வணங்கியநன் னிலமாம்

ஈசன் வாழுமுயர் நிலமாம்

இராமேஸ் வரமென்னு மூரில்

எங்க ளினியகலாம் பிறந்தார்

 

பெரிய குடும்பத்தில் பிறந்து

பெற்றோர் ஆதரவில் வளர்ந்து

அரசு பள்ளிதனில் படித்து

ஆய்வுத் துறைகளிலே நுழைந்தார்

பொறியி யலில்பட்டம் பெற்று

பாது காப்பாய்வில் சேர்ந்தார்

விரைவு ஏவுகணை யொன்றை

விண்ணில் செலுத்தியிவர் வென்றார்

 

பொட்டல் வெளிதனிலே அணுவைப்

புகைத்துச் சோதனைகள் செய்யக்

கட்டம் கட்டமாக முயன்று

கவனம் சிதறிடாது முடித்தார்

திட்டம் திறம்படவே தீட்டித்

திருப்ப மேற்படவும் வைத்தார்

பட்டம்  பதவிகளும் பெற்றுப்

பாரோர் போற்றிடவே வாழ்ந்தார்

 

மூன்று கடல்சூழிந் தியாவின்

மூத்த குடிமகனா யுயர்ந்து

சான்றோர் கூடுகின்ற அவையில்

சங்கத் தமிழ்மறையைப் பேசி

ஆன்றோர் அகமகிழச் செய்த

அப்துல் கலாமென்னு மறிஞர்

ஈன்ற பெற்றோர்தம் புகழை

ஏற்றம் கொண்டொழுகச் செய்தார்

 

 


 

 

 

 

 

 

 

 

திங்கள், 5 அக்டோபர், 2020

 

கலாமாம் எங்கள் கலாமாம்

 

கலாமாம் அப்துல் கலாமாம்

கனவு காணச் சொன்ன

கலாமாம் அப்துல் கலாமாம்

 

உலகோ ரெல்லாம் போற்ற

உயர்ந்த நிலையில் இருக்கும்

உண்மை யான தலைவர்

 

ஏற்றுக் கொண்ட பதவி

ஏற்றம் மிகுந்த தெனினும்

எளிமை யான மனிதர்

 

ஓய்வு பெற்ற போதும்

ஓய்ந்தி ருக்கும் நினைவை

உள்ளம் கொள்ளா மனிதர்

 

பள்ளி தோறும் சென்று

படிப்பின் மேன்மை யுணர்த்திப்

படிக்கச் சொன்ன ஆசான்

 

மழைநீர் வேண்டு மென்றால்

மரங்கள் தேவை யென்ற

மாண்பைச் சொன்ன மனிதர்

 

சின்ன வயது கனவில்

சிறகை முளைக்கச் செய்யும்

சிந்தை வளர்க்கச் சொன்னார்

 

கண்ட கனவை நினைவில்

கொண்டு வந்து காட்ட

கடிதாய் வுழைக்கச் சொன்னார்

 

துன்பம் துரத்தும் போதும்

திரும்பி நின்று பார்த்தால்

தூர வோடும் என்றார்

 

எண்ணும் ஆசை யாவும்

ஏற்றம் மிகுந்த ஒன்றாய்

இருக்க வேண்டும் என்றார்

 

கற்றுக் கொடுக்கும் குருவைக்

கடவுள் நிலையில் வைத்து

கைகள் கூப்பச் சொன்னார்

 

 

 

தலைமுறை இடைவெளி (தந்தையும் மகனும்)

வாழும் வாழ்க்கைப் பாதையில்

      வறுமை வந்த போதிலும்

வாழும் வழியைப் பெற்றிடும்

      வளமை யான கல்வியைக்

காலம் கருதி யளித்திடக்

      குருவைப் போல்தன் கடமையை  

நாளும் செய்து முடிக்கவே

      நல்ல எண்ணம் கொண்டவர்

 

வலிமை குன்றாத் தோற்றத்தில்

      வயதும் முதிர்ச்சி கண்டிட

இளமைப் பொலிவு மறைந்திடும்

      ஈர்க்கும் சக்தி குறைந்திடும்

அலையும் ஆசை மனத்தினில்

      அவல எண்ணம் தோன்றிடும்

முழங்கும் வாஞ்சைப் பேச்சினில்

      முரண்மை சொற்கள் சூழ்ந்திடும்

 

அழகு நிறைந்த பசும்வெளி

      ஆசை மகனோ டமர்ந்திட

அழகு பறவை குருவியும்

      அருகே அமர்ந்து ஒலித்திட

மழலை கேட்கும் கேள்விபோல்

      மாற்ற மில்லாக் கேள்வியைப்

பழமை நினைவில் பலமுறை

      பாச மகன்முன் கேட்டிட

 

பொறுமை யற்ற மகனவன்

      பெரிதாய்க் கத்திப் பேசவே

வெறுப்பைக் காட்டும் மகனிடம்

      வேறு வார்த்தை மொழிந்திட

விருப்ப மில்லாப் பொழுதிலும்

       வளர்த்த வளர்ப்பில் குற்றமோ

பொறுப்பை உணராக் குற்றமோ

       பொதுவி லறிய எண்ணினார்

 

பகைவர் போலப் பேசிடும்

       பெற்ற மகனின் எரிச்சலை

அகற்ற வேண்டும் என்பதால்

       அன்றே அன்பாய் எழுதிய

அகக்கு றிப்பு நூலினை

       அளித்துப் படிக்கக் கூறினார்

அகக்கு றிப்புச் செய்தியை

       அறிந்து கொண்ட மகனுமே

 

பந்த பாசப் பிணைப்புடன்

       பரித விக்கும் முதுமையில்

இந்த உலக வாழ்க்கையை

       ஈகை செய்யத் துணிந்திடும் 

விந்தை மிகுந்த நடத்தையால்

       விலக்க முடியா அன்பினைத்

தந்தை காட்டும் வழியினில்

       தானு மளிக்கத் தொடங்கினான்


                                                      கணேசுகுமார் பொன்னழகு

                                                       சிங்கப்பூர்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

 

கிழப் பிள்ளையின் குறிப்பேடு

 

இளமைப் பருவம் தூய்ந்திட

      ஈர முதுமை பெற்றதால்

வளமை யான சுரப்பிகள்

      வறட்சி நிலைக்குப் போகவே

வளப்பம் மிகுந்த பார்வையும்

      வரைய றைக்குள் சுருங்கிட

அழகு நிறைந்த மகனுடன்

      அமர்ந்து பேசும் காட்சியில்

 

மழலை மாறா வார்த்தையில்

      மகிழ்ந்து குழைந்து மொழிந்திட

பழகும் பிள்ளைப் பேச்சினைப்

      பருகி யின்பம் துய்க்கையில்

மழலை யன்னக் கேள்வியை

      மாற்ற மின்றித் தொடர்ந்திட

விளக்கம் கூறும் தந்தையும்

      வெறுப்பைக் கக்கும் மகனுமே!

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

மனமுவந்து வாழ்த்துகிறேன்!

 

நான்காண்டு காலம்

      நட்புடனே பழகித்

தேனுண்ணும் வண்டாய்த்

      தினந்தோறும் வந்து

நான்சொன்ன தமிழை

      நன்முறையில் கற்று

ஆண்டிறுதித் தேர்வை

      அழகாக எழுதி

 

வானுயர  வாழ்வை

      வளர்ச்சியெனக் கொண்டு

மேன்மேலு முயரும் 

      மேற்படிப்பைப் படிக்க

மான்போலத் துள்ளி

      மகிழ்வுடனே செல்லும்

மாணவருக் கோயென்

      மனமுவந்த வாழ்த்து

 

நான்பார்க்கும் பணியில்

      நல்லெண்ணம் கொண்டு

நான்கினத்தின் உறவை

      நன்முறையில் சொல்ல   

வீண்வாத மின்றி

      விருப்புடனே கேட்ட

மாணவருக் கோயென்

      மகிழ்வான வாழ்த்து

ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 25 (07.06.2020)

'ஒளியும் மனிதர்களும் உலாவரும் மிருகங்களும்'

மரஞ்செடிகள் மலரும் கொடிகள்
மலைகளோடு மண்டி யிருக்க
மிருகமோடு பறவை பூச்சி
மற்றவையும் வாழும் காடு
தரமில்லா மனித னிங்குத்
தமதுநல மொன்றை மட்டும்
பெரும்நோக்காய்க் கொண்ட தாலே
பெரும்காட்டை யழித்து வந்தான்

எல்லையில்லா வலிமை கொண்ட
இயற்கைவனம் வீழ்ந்த தாலே
உள்ளேயிருக்கும் மிருகம் கூட
ஊருக்குள் வந்து உலாவ
தொல்லைபல தந்து தந்து
துன்புறுத்தி நம்மை வாட்ட
வெளியிருக்கும் மனித ரெல்லாம்
விரைந்தோடிச் சென்றே யொளிந்தும்

கொடியநோயாய் உலகில் வந்த
கொரோனாவைப் போன்ற தொற்று
கடுமையான கட்டுப் பாட்டைக்
கடைப்பிடிக்க வைத்த தோடு
உடுத்துகின்ற உடையைப் போலே
உறவுகளைக் களைய வைத்து
முடிவில்லா மரணப் பயத்தை
முளைக்கவிட்டுச் சென்ற திங்கே

இயற்கையோடு இயைந்த வாழ்வை
ஏற்றமாக நினைத்த மனிதன்
செயற்கையிலே விளைந்த வாழ்வைச்
சிறப்பென்று கருதி வாழ
உயர்வான உண்மை வாழ்வும்
உரமில்லா பொய்மை வாழ்வாய்
உயிரற்றுப் போன தாலே
ஓடியோடி ஒளிகின் றானே




நாள் 32 (14.06.2020)

'ஒரே ஒருமுறை சுவாசித்துக்கொள்

சைகைகாட்டும் கைபோலச் - சற்று
சாய்ந்திருக்கும் கிளைகளோடு
வைகையாற்றுக் கரையோரம் - பரந்து
வளர்ந்திருக்கு மாலமரம்

கூகைமுதல் குருவிவரை - மிகக்
குதுகலமாய் அமர்ந்திருக்க
தோகைமயில் துடிப்புடனே - தன்
துணையோடு யாடிவரும்

ஆலையில்லா ஆற்றோரம் - மிக
அழகழகாய்ப் பூத்திருக்க
சோலையொன்றை வார்த்ததுபோல் - அந்தச்
சுற்றியுள்ள இடம்மாறும்

மாலைவெயில் மஞ்சளாகிப் - பின்
மையிருட்டாய் மாறயிலே
சோலையெங்கும் பூத்துள்ள - மலர்
சுகந்தத்தைப் பரப்பிவரும்

கொள்ளைகொள்ளு மழகோடு - இந்தக்
குறையில்லா வாசனையும்
எல்லையின்றிப் பரவியவை - இன்று
இல்லாமல் போனாலும்

உள்ளிருக்கு மிதயத்தால் - ஒரே
ஒருமுறைநான் சுவாசித்துக்
கொள்வதற்குச் சுகமான - காற்றுக்
கோர்வையினைத் தேடுகின்றேன்






நாள் 31 (13.06.2020) - 2

'நுரைக்குமிழிகளில் உடைந்த கனவுகள்'


அரையாண்டு விடுமுறையில்
அன்பான சொந்தமோடு
உறவாடி மகிழ்வதற்கும்
ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும்
உறுதியான முடிவினையே
உள்ளத்தில் கொண்டிருக்க
கறைபடிந்த குறையாகக்
கொரோனாவும் வந்திடவே

விரைவாகப் பறக்கின்ற
விமானங்கள் அத்தனையும்
கரைதாண்டிப் பறக்காமல்
கடுந்தடைகள் போட்டதனால்
நிறைவேறாக் கனவுகளாய்
நெஞ்சிருக்கும் எண்ணமெல்லாம்
நுரையெழுப்பும் குமிழியாகி
நொறுங்கித்தான் போனதிங்கு