வெள்ளி, 24 நவம்பர், 2023

 

அமரர் சுப அருணாசலம் அவர்களின் நினைவு

சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி 2023

 

தலைப்பு - ஓரிடம் கிடைக்கும் உணவுகள்

 

சிங்கை நாடே! சிங்கை நாடே!

சிறப்புடன் திகழும் சிங்கை நாடே!

எங்கு முள்ள உணவுக ளெல்லாம்

ஓரிடம் கிடைக்கும் சிங்கை நாடே!

சிங்கை நாடே! சிங்கை நாடே!

சீனம் மலாய் இந்தியர் உணவுகளையும்

மேலைக் கீழை நாட்டு உணவுகளையும்

சிறியோர் பெரியோர் இளையோர் கூடிச்

சேர்ந்தே அமர்ந்து உண்டு மகிழும்

சிங்கை நாடே! சிங்கை நாடே!

மரபு சார்ந்த முறையில் சமைத்த

இட்லி தோசை பூரிக் கிழங்கும்

நல்ல பன்னீர் மசாலாக் கூட்டும்

இங்கே எளிதாய் உண்ணக் கிடைக்கும்

சிங்கை நாடே! சிங்கை நாடே!

பாங்குடன் சமைத்த பசும்காய் கீரைகளும்

இறைச்சி சுக்கா வருவலோடு

நண்டு நத்தை மீனிறால் குழம்பும்

ரசித்து ருசித்துப் புசிக்க முடியும்

சிங்கை நாடே! சிங்கை நாடே!

 

சனி, 30 செப்டம்பர், 2023

 

நதி

கூட்டுச் சேர்ந்து கும்மிருட்டாய்க்

கூடி வந்த கருமேகம்

மேட்டுப் பக்கம்  மின்னலோடு

மேவி யெங்கும் பொழிந்ததாலே

காட்டு வெள்ளம் கரைதேடிக்

கடந்து வந்த பாதையெல்லாம்

நாட்டு மக்கள் நலம்வாழ

நான்கு பக்கம் ஆறாச்சு (நதியாச்சு)

 

காலம்

காலமே! காலமே! முன் நகரு

காலமே! நேரமே! முன் நகரு

ஓடு! ஓடு! நீ ஓடு!

உன் மகிமை தெரிந்திட நீ ஓடு!

மனிதன் புரிந்திட நீ ஓடு!

 

ஊரு உலகம் எல்லாம்

உன்னைத் தேடி அலையுது பார்

ஒரு நிமிடம்கூட நிற்காதே

மனிதன் உன்னிடம் கெஞ்சுவான்

அதை நீயும் கேட்காதே

 

சூரியன் உதயத்திற்காக நிற்பாயா?

இல்லை மறைவிற்காக நிற்பாயா?

உய்வில்லா உன்தன் குறிக்கோளைப்

புனிதமான உன் வரவோடு

மனிதன் புத்தியில் உரைப்பாயா?

 

ஒன்று இரண்டு என்றில்லை

உயர்ந்த சக்தி அதைக் கொண்டு

நீ அழும் மனிதனைப் புதைப்பாய்  

உலகின் அழிவைக் கண்டு

ஊமையென வேடிக்கை பார்ப்பாய்

 

அதுவே உனது உரிமை

அது மட்டுமே உன் லட்சியம்

நிற்காதே! காலமே! நிற்காதே!

நீ நகர்த்தும் உலகில் நிற்காதே!

ஓடு ஓடு நீ ஓடு!

 

2. சிங்கையவள் பேரழகு காட்சிகள்

(சமனிலைச் சிந்து)

 

சிங்கப்பூர் நாடென்னும் பெயர்பெற்று – உலகில்

சீரோடும் சிறப்போடும் விளங்குகின்ற

சிங்கையவள் பேரழகு காட்சிகளை – இன்று

சிந்தாமல் சிதறாமல் நானுரைப்பேன்

 

சிங்கமுகம் மச்சவாலும் கொண்டதாலே – சிங்கை

சின்னமெனச் சரித்திரத்தில் நிலைத்தவளாம்

பங்கமில்லாப் பல்லினத்தார் பழக்கமதை – தன்னுயர் 

பண்பாட்டுப் பேரழகாய்க் கொண்டவளாம்  

 

அங்கமெல்லாம் அணிகலன்போல் கட்டடங்கள் – சூழ்ந்த    

அந்திநேரச் சிங்கையவள் மெய்யழகு

தங்கநிகர் மின்னொளியின் மின்னழகால் – ஒளிரும்    

தன்மையினைப் பெற்றிட்டப் பெருமகளாம் 

 

மார்கழியின் மையிருட்டில் முழுநிலவும் – அலைபோல்

முன்னகர்ந்து உச்சிவரும் கோலமதைக்

கார்காலப் பனிக்குளிரில் சாளரத்தின் – பின்நின்று

களிக்கின்ற காட்சிகளைப் பெற்றவளாம்

 

பூங்காவின் நகரென்று புன்முறுவல் – காட்டிப்

புத்துணர்வுப் பூக்களிலே நிறைந்தாலும்  

பூங்காவுக் குள்நகராய்ப் புதுப்பொலிவு – பெற்றிங்குப்   

புன்னகையின் பூரணத்தைத் தருபவளாம்

 

கண்ணோக்கும் இடமெல்லாம் காணுகின்ற – உயர்

கட்டடங்கள் கலையழகைத் தந்தாலும்

மண்ணூடி எழுகின்ற மரஞ்செடியின் – பேரழகு

மாண்புகளை மதித்திடச்  செய்பவளாம்


பன்னாட்டு விமானங்கள் பறந்துவந்து – நிற்பதோடு

பயணிகளும் பயனடையும் சேவையினைத்

தன்னாட்டுச் சாங்கியிலே அழகழகாய் – ஆற்றுவதால்

தரணியோர்கள் போற்றுவதை ரசிப்பவளாம் 


 

தமிழ்மொழி விழா 2023 பொதுப் பிரிவுக்கான போட்டிக் கவிதைகள்

1. அழகோ அழகு (அறுசீர் விருத்தம்)

ஆழிசூழ்ந்து ஆர்பரிக்கும் அலைநடுவே

அங்கமெல்லாம் பச்சைவண்ண ஆடைகட்டி

கீழிருந்து மேனோக்கும் கட்டடமாய்க்

கீறிவைத்த கோடாகக் கிளைபரப்ப

கீழ்திசையில் வீற்றிருந்து கோளோச்சும்

கலைமகளாம் சிங்கையென்னும் திருமகளை

வாழியநின் புகழ்வாழி யவேயென்று

வானுயர வாழ்த்துவதி லுமோரழகு

 

ஓருருவாய் எம்மனத்தில் நிலைபெற்ற

ஒப்பற்ற லீகுவானின் தலைமையாலும்

போருருவாய்ப் பொங்கியெழும் புலியொத்த

பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பினாலும்

பாருக்குள் வளர்ந்ததெங்கள் சிங்கைநாடு

பல்லினத்தார் வாழுகின்ற தேன்கூடு

பேருபெற்ற பழந்தமிழும் ஆட்சியிலே

பங்காற்றும் மொழியென்ப திலுமழகு

 

சீருருவச் செம்மையினைக் கொண்டிலங்கும்

சிங்கையாற்றுக் கரையோரம் நிலைபெற்ற

பேருருவ இராட்டிணத்தின் மீதேறி

பெருந்தொலைவுக் காட்சிகளைக் காணுகையில்

காரிருளைக் கிழித்தெறிந்து ஊடுருவும்

கதிரவனின் ஒளிவீச்சுக் கற்றைகளோ

நீருருவின் நிழல்போல விரிந்திருந்து  

நிலமெங்கும் எதிரொளிப்ப திலோரழகு

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

கிராமத்துக் கீதம் 


மாமே பெத்த புள்ள

மாநிறத்து சின்னப் புள்ள

சாமை அரிசி குத்தி

சமைக்கிறியே என்ன புள்ள


கண்ணங் குழி விழ

கண்சிமிட்டிப் பார்க்கும்புள்ள

எண்ண மெல்லாம் சிறகடிக்க

இங்கு வந்து பேசுபுள்ள


சோளவளக் காட்டுக்குள்ள

சும்மா நின்னு பேசினாலும்

ஆளரவம் கேட்குதுன்னு

அங்குமிங்கும் பாத்த புள்ள


ஒத்தயடி பாதை ஒன்னு

ஊரோரம் போகுதுன்னு

அத்தமக  ரத்தினமே

அங்கு வரச் சொன்னபுள்ள


பட்டுமேனி நோகாமா

பந்தளுக்குள் வளர்ந்தபுள்ள

சிட்டாட்டம் பறக்குறீயே

செத்தநின்னு பேசுபுள்ள


கட்டொழுங்கு குழையாம

கண்ணியமா வளர்ந்தபுள்ள

கட்டழகன் நானிருக்கேன்

கைகோர்க்க வாடிபுள்ள


எதிர்வீட்டு ஜன்னல்வழி

எட்டியெட்டி பார்த்தபுள்ள

எதிரேநான் நிக்கிறேனே                                                                              

இங்குவந்து பேசுபுள்ள

  

அதிகாலை வேளையிலே 

ஆத்துக்குப் போறபுள்ள 

புதிரான கேள்வியாலே 

புருவத்தைச் சுழிப்பதென்ன  


தொலைதூரம் நானிருக்கேன் 

துன்பத்தில் தோய்ந்திருக்கேன்

தொலைபேசியில் பேசிநீயும் 

துன்பத்தைப் போக்குபுள்ள


அந்திசாயும் நேரத்திலே

அம்மாவோடு போறபுள்ள

முந்திநீ போனாலும்

முகம்காட்டிப் போடிபுள்ள


சந்தியோரம் நானிருக்க

சாடைபேசிப் போறவளே

பிந்தி நடைபோட்டு    

பின்னழகைக் காட்டுறீயே

                       கொரோனாவும் பொருளாதாரமும்

 

ஆணென்றும் பெண்ணென்றும் அளவீடு காட்டாது

அண்டங்கள் எங்கெங்கும் அலைபோலே ஆர்பரித்து

மானிடரின் உயிர்மூச்சை மறிக்கின்ற கொரோனாவும்

மறுபடியும் மறுபடியும் மாலாது தோன்றியதால்

காணுகின்ற இடமெல்லாம் கட்டுமானத் தொழிலோடு

கலத்தொழிலும் கைத்தொழிலும் கைநழுவி நடுநடுங்க

தூணாக எண்ணுகின்ற துறைசார்ந்த பொருளியலும்

துரும்பாகத் தேய்ந்திங்குத் துன்பத்தில் ஆழ்த்தியதே!

 

தொற்றென்னும் துர்க்கிருமி தொந்திரவு செய்தபோது

தொழிலற்றுத் துன்புற்று வருந்தியோர்கள் பலருண்டு

பற்றில்லா பந்தத்தின் பாசாங்கு வார்த்தைகளோ

பசியாற்ற முடியாமல் பயனற்றுப் போனதனால்

பெற்றுள்ள படிப்பினைகள் பிழைப்பிற்கு வழிசொல்ல

பேரில்லாப் பேற்றினையே பெற்றிடாமல் பிரிந்துநின்று

கற்றவரைத் தொழில்நுட்பம் கரைசேர்க்க எண்ணினாலும்

கல்லாத மானிடர்முன் தோற்றேதான் போனதிங்கு

 

 இருள் என்பது குறைந்த வெளிச்சம்

 

விண்பரப்பின் வெளியில்

வெளிச்சமது குறைய

மண்பரப்பின் மீதில்

மையிருட்டு சூழும்

 

என்கின்ற மெய்யை

எல்லோரும்  அறிய

முன்னெடுத்துச் சொல்லும்

முத்தான வரியில்

 

இருளென்ற வொன்று

இங்கில்லை  யென்று

பொருளோடு கூறும்

புனைவில்லாக் கதையை

 

அறிவியலி லாழ்ந்த

அறிஞர்கள் கூடி

அறிவிற்கு உகந்த

ஆய்வுகளின் முடிவாய்

 

நெறிமுறைகள் செய்து

நீதியாளர் முன்னே

செறிவார்ந்த கருத்தைச்

செம்மையுடன் சொன்னார்

வெள்ளி, 3 மார்ச், 2023

 3 தூய்மையோடு பாதுகாப்பும் தேவை

 

சிங்கைநகர் தோழரோடு செந்தமிழின் புலவர்களும்

சுற்றுப்புறத் தூய்மையோடு பாதுகாப்பும் தேவையென்று

பொங்குதமிழ்ப் பேச்சினூடே புன்னகையும் சிந்துகின்ற

தங்கநிகர் அருணாச்சலம் நினைவுநாளில் பாடுங்களே!

 

சங்குசிப்பி சங்கமிக்கும் சமுத்திரத்தின் சமவெளியில்

சல்லிகளும் சாக்கடையும் சடுதியிலே பரவுதுங்க

சாராயப் புட்டியோடு குளிர்பானப் புட்டியையும்

சகசமாக வீசுகின்றார் சங்கடத்தைக் கொடுக்கின்றார்

 

காகித்த்தின் கழிவுகளும் நெகிழிப்பை குப்பைகளும்

கணக்கின்றிச் சேருதுங்க கண்முன்னே கிடக்குதுங்க

கண்ணிவலைப் பின்னல்களும் கயிறுவலை முடிச்சுகளும்

கடலுயிரை மாட்டவைத்துக் கண்டபடி வதைக்குதுங்க

 

வான்வெளியும் கடல்வழியும் கழிவாலே கெடுவதற்குத்

தொழிற்சாலை வளர்ச்சியிங்குத் துணையாக இருந்தாலும்

மேலடுக்குக் கட்டடங்கள் மேல்நோக்கி உயருதுங்க

கீழடுக்குக் கட்டுமானம் கீழ்நோக்கிச் செல்லுதுங்க   

 

மரஞ்செடியும் கொடிவகையும் மண்ணிலின்று குறைந்ததனால்

மாசறுக்க மழையின்றி மாசிவெயில் கொழுத்துதுங்க

போக்குவரவு வண்டிகளும் புகைமூட்டம் கக்கியதால்

பசுமைவெளி புற்களுமே பாழ்நஞ்சாய் ஆனதுங்க

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 2 சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்...

 

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

சிங்கப்பூர் நல்ல சிங்கப்பூர்

சுற்றுப்புறச் சூழலைத்தான் சொர்க்கமாக்கி வைத்திருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

சீனம் மலாய் தமிழரெனப் பல்லினமும்

சிங்கப்பூர் மக்களெனச் சேர்ந்திங்கு வாழ்கின்ற

சிறந்ததொரு வாழ்வியலை இன்றுவரை கொண்டிருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

பாரில் கொழுவிருக்கும் பல்லின நாடுகளில்

பூங்கா நகரெனப் பாங்காய்ச் சொல்லிடவே

பார்க்கும் இடமெல்லாம் பசுமையினைக் கொண்டிருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

சிங்கப்பூர் மக்களோடு வெளிநாட்டுப் பயணிகளும்

சுற்றிச்சுற்றிப் பார்ப்பதற்கும் சொகுசாய்ப் பொழுதைக் கழிப்பதற்கும்

ஏற்றதொரு சூழலினை எழிலாகக் கொண்டிருக்கும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 

கடலோர மணற்பரப்பில் களைப்பாறும் மக்களுக்குக்

குட்டிகுட்டித் தீவுகளும் குறுமரக் காட்சிகளும்

கண்ணுக்கு விருந்தளித்துக் களிப்பூற வைத்திடும்

சிங்கப்பூர் நம்ம சிங்கப்பூர்

 1 சுயமாய் முடிவு எடுப்போம்

 

அருணா அண்ணன் நினைவை

ஆழ்ந்து போற்றும் நாளில்

சுற்றுச் சூழல் காக்க

சுயமாய் முடிவை யெடுப்போம்

 

வெய்யோன் ஒளியின் கதிரும்

பெய்யும் மழையின் நீரும்

கொய்யும் காயும் கனியும்

உய்வு தரவே வேண்டி

 

சுற்றும் முற்றும் கிடக்கும்

குப்பை கூளம் எல்லாம்

உற்ற இடத்தில் சேர்க்கும்

உன்னதப் பொறுப்பை ஏற்போம்

 

சொர்க்க லோகம் போல

சொலிக்கும் சிங்கை நாட்டைத்

தர்க்க மின்றி ஒன்றாய்த்

தூய்மை யோடு வைப்போம்

 

சிங்கை யெங்கும் பசுமை

சோலை வனம்போல் சூழ

பங்கம் இல்லா மரங்கள்

பரந்து செழிக்க வளர்ப்போம்

 

 

 பொங்கல் வாழ்த்து!


வானூரும் செங்கதிரோன்

              வையமெல்லாம் வலம்வரவும்

ஊனூறும் உயிர்களுக்கும்

              உணவளித்து உய்வதற்கும்

தானூரும் தன்னிழல்போல் 

              தைமாதம் முதல்நாளில் 

கோனூரும் தேரேறி

              குடதிசையில் நேருதிக்கும்  


வானூரும் இளம்பரிதி

              வார்க்கடலில் நீரெடுத்து  

மேனூரும் மேகமாகி

              மழையாகப் பொலிந்திடவே

மீனூரும் ஆறுகளும்

               மிகையாகப் பாய்ந்தோடி 

மானூரும் நிலமெங்கும்

              மகசூழைப் பெருக்கிவிடும்


தேனூரும் பூக்களாகத்

               திக்கெட்டும் மணம்பரப்பி

காணூரும் காட்சிகளாய்க்

               கண்களுக்கு விருந்தளிக்கும்

தீனூரும் எண்ணங்கள்

               தினந்தோறும் வந்தாலும்

தானூறும் தண்ணீர்போல்

               தைநாளில் தணித்துவிடும்

 *நன்னெஞ்சர் குருசாமி

நலமோடு வாழ்கவாழ்க!*

 

குன்றாத குணமோடும்

குறையாத மனமோடும்

அன்பான அரவணைப்பில்

அனைவரையும் நேசித்து

நன்றான பாதையில்

நாளெல்லாம் பயணிக்கும்

நன்னெஞ்சர் குருசாமி

நலமோடு வாழ்கவாழ்க!

 

மாணவர்கள் மாவுலகில்

மாண்புறவே வேண்டுமென்று

தேனென்று இனிக்கின்ற

தீந்தமிழின் மொழியினிலே

கோனென்று உயர்ந்துவாழும்

கொள்கையோடு இலக்கினையும்

கானம்போல் கற்பிக்கும்

கண்ணியவான் வாழ்கவாழ்க!

 

பருவத்தின் மாற்றத்தால்

படிக்கின்ற மாணவர்கள்

உருமாறி வந்தாலும்

உளமோடு வரவேற்று

பெருந்தேர்வுப் பயிற்சிகளைப்

பிழையின்றிக் கற்பிக்கும்

குருவாக வீற்றிருந்த

குருசாமி வாழ்கவாழ்க!

 

நிலையத்தின் நிலைமையினை

நித்தமிங்கு வளர்த்திடவே

பலபேரின் மத்தியிலே

பண்புடனே பேசினாலும்

நலமான கல்விகொண்டு

நயமாகக் கற்பிக்கும்

குலமகனார் குருசாமி

குறையின்றி வாழ்கவாழ்க!

 

நேயத்தின் நினைவாளர்

நற்குணத்தின் குருவாளர்

ஓய்வின்றி உழைப்பதற்கு

உடல்நலனும் உளநலனும்

தேய்வின்றி நலம்பெறவும்

தெளிவான வளம்பெறவும்

நோயின்றி நொடியின்றி

நூறாண்டு வாழ்கவாழ்க!

 

என்றும் அன்புடன்....

கணேசுகுமார் பொன்னழகு

தமிழாசிரியர்.