சிங்கை 60
“சிங்கை மகள்” – ஏப்ரல் 2025
கங்குகரை யில்லாத கடல்நடுவே யமைந்தாலும்
சிங்காரச் சிங்கையென சீமையெங்கும்
பேருபெற்றாய்
எங்குமில்லா இடவசதி இங்குனக்கில்
லையெனினும்
மங்காத ஒளிகொண்டு மாட்சிமைகள் புரிகின்றாய்
சங்குவளர் கடலினையும் சதுப்புநிலக்
காட்டினையும்
அங்கமெனக் கொண்டவளே! அமைதியினைப்
பூண்டவளே!
சங்ககாலத் தமிழோடு சீனமலாய் மொழிகளையும்
அங்கமெல்லாம் அணிகலனாய் அணிந்துவலம்
வருகின்றாய்
எங்கெங்கு நோக்கிடினும் எழிலார்ந்த
ஓவியமாய்
செங்கொடியின் பட்டொளியில் சிறகடித்துப்
பறக்கின்றாய்
நங்கூர மிட்டகப்பல் நாற்புறமும் நிற்பதுபோல்
செங்குத்துக் கட்டடமாய்ச் சிகரம்போல் நிற்கின்றாய்
பொங்குமலை யாழியினைப் பொருளீட்டும்
பொருளாக்கித்
தங்கநிகர் வருமானம் வாய்ப்பதற்கு
வித்திட்டாய்
பங்குசந்தை முதற்கொண்டு படகுதுறை
ஈறாக
பங்களிக்கும் இடமாக்கிப் பாங்குடனே
தலைநிமிர்ந்தாய்
சிங்கமுகச் சீற்றத்தைச் சிலையுருவில்
கொண்டேநீ
சிங்கையாற்றுக் கரையோரம் சின்னமென
நிற்கின்றாய்
எங்கிருந்து வந்தாலும் எவ்வினத்தைச்
சார்ந்தாலும்
இங்கிருக்கும் மக்களோடு இணைந்துவாழச்
செய்கின்றாய்
பொங்குகின்ற புகழோடு புண்ணியமும்
பெற்றவளே!
மங்குமொளி யில்லாத மகத்துவத்தில்
திளைப்பவளே!
செங்கதிரோன் தோன்றுமுன்னே செய்வினையைத் துவங்கினாலும்
பங்கமின்றிப் பழுதின்றிப் பணியினையே
முடிக்கின்றாய்.
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்