வியாழன், 8 மே, 2025

 

கவிராசன் இலக்கியக் கழகம் & நம் உரத்த சிந்தனை நடத்தும்

விருத்தப்பா போட்டி 2025

அன்பொன்றே! வழியென்று காட்டு!

 

பெண்ணென்றும் ஆணென்றும் பேதமைக ளின்றிப்

பெற்றெடுத்தத் தாயுள்ளம் பேருவகை கொள்ளும்

எண்ணத்தி லுதித்திட்ட ஏடில்லாப் பாட்டில்

இன்தமிழின் இலக்கணங்கள் இசையோடு துள்ளும்

கண்ணென்றும் மணியென்றும் களிப்புடனே கொஞ்சி

காட்டுகின்ற பாசமதை கவிமொழிகள் சொல்லும்

பண்பாட்டி லக்கியங்கள் பகர்கின்ற கூற்றில்

பண்பட்ட அன்பொன்றே வழியென்று காட்டும்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

சிங்கப்பூர் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு கவிமாலை நடத்தும் மரபு / பிற கவிதைப் போட்டிக்கு உரிய கவிதை. (முதல் பரிசு பெற்றது.) - ஏப்ரல் 2025

செய்நன்றி மறவாச் சிங்கைத் தாயே!

சீரென்னும் சிறப்பினையும் சிரத்தினிலே சூடி

சிங்கப்பூர் சீமையெனச் சிறந்தபெயர் பெற்றாய்!

ஊரென்னும் பேரினையும் உன்னிடத்தில் கொண்டே

உலகோர்தம் உள்ளமதில் ஒட்டுறவாய் நின்றாய்!

காரென்னும் மேகம்போல் கருணைமழை பொழிந்து

கடைக்கோடி மக்களுக்கும் கவலைநீங்க செய்தாய்!

பாரென்னும் பரப்பினிலே புள்ளியென வீற்றும்

பகைமையின்றிப் பாசமுடன் பற்றுறவு கொண்டாய்!

 

இளமையென்னும் ஊஞ்சலிலே இலங்குகின்ற போதும்

இரக்கமோடு இறைமையையும் இதயமதில் கொண்டாய்!

வளமையென்னும் இனிமையினை வழங்குகின்ற தாலே

வளர்ந்துவிட்ட நாடெனவே வையகத்தில் நின்றாய்!

விளம்பரங்கள் இல்லாது வீறுநடை போட்டு

விவேகமோடு வெற்றியையும் விருந்தெனவே ஏற்றாய்!

வளர்ச்சியென்னும் பாதையினை வகையாகக் கொண்டு

வருங்காலத் தலைமுறைக்கும் வாழ்வுதனைத்  தந்தாய்!

 

மெய்வருத்த உழைப்பவர்கள் மேன்மையுற்று வாழ  

மேதினியில் முதன்மைபெற்ற துறைமுகத்தைக் கொண்டாய்!

உய்வோடு உயர்வினையும் உறுதியாகத் தந்து   

ஊக்கமுடன் உலகோரை உன்பக்கம் ஈர்த்தாய்!

செய்நன்றி மறவாத செம்மையினைப் போற்றி

செந்தமிழை ஆட்சிமொழியில் ஒன்றெனவே ஏற்றாய்!

பொய்யின்றி மெய்யுரைக்கும் புண்ணியத்தைப் பெற்று

புவிப்பரப்பின் பூமகளாய்ப் புகழோங்கி நின்றாய்!

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

தமிழணங்கே!” – ஏப்ரல் 2025

 

நாற்புற மாழிசூழ் நற்சிங்கை நன்னாட்டில்

வீற்றிருந்து வெல்லும் வினைகள் புரிகின்ற

பேற்றினைப் பெற்றிலங்கும் செந்தமிழ ணங்கே!யுன்

கூற்றினைக் கூறிடுவே னிங்கு

 

பாற்கடல் தாண்டியும் பேசுகின்ற பைந்தமிழே!

மேற்றிசை நாட்டிலும் மேலோங்கி நின்றிடினும்

காற்று வழிபரவு மின்னிசையே! கானமே!

மாற்றுமறு வற்றவள் நீ!

 

நூற்றாண்டு காலமாய் நுண்ணறிவு நுட்பத்தின்

ஊற்றுவழி யுட்கண்ணோ வுன்னுள்ளே யிருப்பதனால்

மாற்றுவழி காண்பதோடு மாசின்றி மின்னிடவும்  

தேற்றமுள்ள தமிழானாய் நீ!

 

நேற்றுமுத லின்றுவரை நீண்டதொரு காலமாகத்  

தூற்றில்லாச் செந்தமிழாய்த் தூய்மையோடு வாழ்ந்தாலும்

சாற்றுகின்ற  சான்றோரும்  தக்கதொரு சன்மானம்

ஏற்பதற்கு வித்திட்டாய் நீ!

 

ஆற்றுவழி யூறுகின்ற ஊற்றின் சுனைபோலும்

சேற்றில் விளைகின்ற செந்நெல் மணிபோலும்

நூற்றாண்டு காலமாய் நெஞ்சினிலே நெக்குருகி

போற்றுதலுக் குள்ளானாய் நீ!

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

 

பெண் பருவங்கள்

பெரியோர் கூறிய நெறிமுறையில்

பெண்ணின் பருவம் இவையென்று

பெரிது வக்கும் முகமாகப்

பேதை பெதும்பை எனத்தொடங்கி

வரிக்கண் மேவும் காலத்தே

மங்கை மடந்தை யெனவளர்ந்து

அரிவை யோடு தெரிவையாகி

ஆழ்ந்த பேரி ளம்மானாள்

 

பெண்ணின் பெரும்பேறு!” – மார்ச் 2025

                              (எண்சீர் விருத்தம்)

மண்பரப்பில் தோன்றுகின்ற உயிர்க ளோடு

                  மகிழ்வோடும் நிறைவோடும் வாழ வேண்டி

அன்றுமுதல் இன்றுவரை தொன்று தொட்டே

                  அன்னைவழிச் சமூகமென ஏற்றுக் கொண்டு

பெண்ணென்ற பெரும்பேற்றின் மாண்பு தன்னைப்

                  பெருமையாக எண்ணியெண்ணிப் போற்று கின்ற

பண்பாட்டைக் கொண்டிலங்கும் தமிழ ரெல்லாம்

                  பண்போடும் பணிவோடும் வாழ்த்தி னாலும்

 

மண்பரப்பில் வாழ்கின்ற  மனித ரோடு

                  மாட்சிமைகள் புரிகின்ற மங்கை யர்கள்

விண்பரப்பின் வீதியிலும்  விரைவ தாலே

                  வியப்பூட்டும் வெற்றிகளைத் தனதாய்க் கொண்டார்

பிண்டத்தைச் சுமக்கின்ற பேற்றைப் பெற்றும்

                  பெண்ணினத்தின் உயர்வுதனை உந்திக் காட்டி

அண்டத்தை அடைவதோடு ஆளு தற்கும்

                  அறைகூவல் விடுக்கின்றார் அன்பு கொண்டே!

 

காதலிக்க நேரமில்லைபிப்ரவரி 2025

            (அறுசீர் விருத்தம்)

அடுக்கு மாடி கட்டடமோ

அக்கம் பக்கம் குடியிருப்போ

குடும்பம் குழந்தை உறவென்று

கூடி யிங்கு வாழ்ந்தாலும்

நெடுநாள் பழக்கம் கொண்டோராய்

நெஞ்சின் நினைவில் நிலைத்தோராய்

அடுத்த வீட்டு மனிதரோடு

அளாவிப் பேச நேரமில்லை

 

கொண்டோர் கொடுத்தோர் வந்தாலும்

குந்திப் பேசும் நேரமின்றி

வண்டாய்ப் பறந்து வளம்சேர்க்க

வாய்ப்புத் தேடி யலைவோரும்

உண்டு முறங்கும் நேரத்தில்

ஓய்வு கொள்ள முனைவோரும்

கண்டும் களித்து முறவாடி

காதல் செய்ய நேரமில்லை

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

 

 

அமரர் சுப அருணாசலம் நினைவு சூழலுக்குப் பாடல் எழுதும் போட்டி!

சிங்கப்பூரு சீமைக்குத்தான் போய் வருவோமா? - இரண்டாம் பரிசு பெற்றது. 

சிங்கப்பூரு சீமைக்குத்தான் போய் வருவோமா?  - கண்ணே

சிறப்பு வாய்ந்த இடங்களுக்கும் போய் வருவோமா?

சிங்கப்பூர் ஆற்றோரம் சுற்றி வருவோமா? – கண்ணே

சின்னச் சின்ன நிகழ்வுகளையும் நினைவுறுவோமா?

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

இங்குமங்கும் கட்டடங்கள் நிறைய இருக்குது  - அவை

ஏற்றம் கொண்ட எழிலாலே பரந்திருக்குது

சிங்கமுக மெர்லயனும் எழுந்து நிக்குது – அதன்

சீற்றத்திலே நீரூற்றும் சீறிப் பாயுது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

தெப்பமன்ன படகுகளும் ஒடுதுபாரு  - அங்குக்

கரையோரம் இராட்டினமும் சுற்றுதுபாரு

கப்பலன்ன கட்டடமும் கண்ணைக் கவருது  - அது

உயரமான கட்டடங்களின் மேலே இருக்குது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

பொழுதுபோக்கும் வசதிகளும் நிறைந்திருக்கிது – அதுக்கு

புலானுபியும் செந்தோசாவும் சான்றாய்த் திகழுது.

விலங்குத்தோட்டம் பறவைப்பூங்க பரந்திருக்குது  - இங்குப்

பல்லினப் பறவைகளும் விலங்குகளும் குழுமியிருக்குது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

புரண்டுவரும் கடலலையோ கரையை முட்டுது – அதில்

பொங்கும் நுரை புதுவிதமாய்ப் புன்னகைக்கிது

திரண்டிருற்கும் கூட்டமெல்லாம் கடலை நோக்குது – அலைகள்

துள்ளியெழுந்து ஆடும்காட்சி கண்ணில் தெரியுது

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

சிங்கைக் கடலோரம் காலாற நடந்திடுவோமா? – நம்ம

கால்களையும் நனையவிட்டுக் களிப்புறுவோமா?

சீனமலாய் தமிழர்தம் உணவுகளை ருசித்திடுவோமா? – அங்குச்

திரையரங்கம் சென்றுதானே படம் பார்ப்போமா?

(சிங்கப்பூரு சீமைக்குத்தான் ...?)

 

     நன்றி மறவாமை (வெண்பா)

நன்றி மறந்தாரை நானிலம் நம்பாது

சென்று அவர்தயவை நாடாது - தென்தமிழர்

மன்றத்தி லென்றென்றும் சேர்க்காது தன்னிலை 

குன்ற அவர்நாணச் செய்!

 

பனிப் படரும் நினைவு – டிசம்பர் 2024

 

தொன்மையெனத் தொல்லியளார் கூறு கின்ற

தமிழர்தம் மரபோடு நற்பண் பாடும்

தொன்றுதொட்டுத் துலங்கினாலும் தூய்மை யோடு

தொடருகின்ற நினைவுகளும் பனியாய் மாறி

இன்றுபோல இணக்கமுடன் மகிழ்ந்து வாழும்

எண்ணத்தை வளர்க்கின்ற இதயம் தன்னில்

முன்னோரின் முதுசொல்லும் முதன்மை பெற்று

முன்னேற்றப் பாதையிலே கொண்டு செல்லும்

 

உள்ளமதில் உருக்கொண்ட ஆசை யெல்லாம்

ஊணுடம்பாய் உருவெடுத்து உளலும் போது

வெள்ளமென வீறுகொண்டு விரைவு கின்ற

வீணான வார்த்தைகளை விட்டொ ழித்து

கள்ளமில்லா வெள்ளைமனம் கொண்டோர் முன்னே

கயமையின்றி வாழ்வதற்குக் எண்ணம் கொண்டு

பிள்ளைமொழி மழலையாலே நீயும் செப்ப

பனிப்படரும் நினைவுகளாய்க் கண்முன் தோன்றும்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு 

சிங்கப்பூர்

 

நிலந்தொடும் மழை” – நவம்பர் 2024

 

ஆறு குட்டை குளமென்றும்

                        ஆழி சூழ்ந்த பரப்பென்றும்

கூறு பட்டுக் கிடக்கின்ற

                        குவல யமென்னும் நிலப்பரப்பில்

வேறு பாடு பார்க்காமல்

                        வெய்யோன் உறிஞ்சும் நீரெல்லாம்

மாறு பட்ட மேகமென

                        மெல்ல வானம் சென்றாலும்

 

சோறு போடும் உழவனவன்

                        சொந்த வுழைப்பில் பயிர்செய்து

பேறு செய்யும் நோக்கத்தில்

                        பெரிய மழையாய்ப் பெய்யுமுன்னே

மீறு கின்ற வளிப்பட்டு

                        மின்ன லிடியாய் ஒலியெழுப்பி

தூறு கின்ற தூவானம்

                        துளித்து ளியாக நிலந்தொடுமே

திரு கணேசுகுமார் பொன்னழகு 

சிங்கப்பூர்

 

 

பௌர்ணமி புன்னகை – அக்டோபர் 2024

 

முப்போகம் விளைந்தநிலம் காய்ந்து

முறைமாறிக் கிடக்குதிங்கு வானம்

தப்பாமல் மழைபெய்தால் தண்ணீர்

தரிசுநிலம் பாய்தோடிச் செழிக்கும்

குப்பம்மாள் நட்டபயிர் விளைந்தும்

குதிர்பானை நிறையாம லிருக்கும்   

பப்பாதி விளைந்தாலும் மகசூழ்

பௌர்ணமியின் புன்னகையாய் மிளிரும்

 

வெப்புவுலை வெகுவாகக் தோன்றியதால் வெளியெங்கும்

அனலாய்க் மாற

தப்பாமல் மழைபொலிந்த காலமெல்லாம் தடமாறித்

தவறி ழைத்துப்

ஒப்பில்லா உழவுக்கும் உழைப்பிற்கும் ஊதியமாய்

                        கொடுத்து வந்த

முப்போகம் விளைந்தநிலம் முட்புதராய் முகம்மாறி

கிடக்கு திங்கு

 

வெப்புவுலை வெகுவாகக் தோன்றி யிங்கு  

வெந்தனலை வெளியெங்கும் உமிழ்ந்த தாலே

தப்பாமல் மழைபொலிந்த கால மெல்லாம்

தடமாறித் தவறிழைத்துப் போன தின்று

முப்போகம் விளைந்தநிலம் மலட்டு மண்ணாய்

முகம்மாறி மூச்சற்று கிடக்கு திங்கு

எப்போது மாறுமிந்த நிலைமை யென்று

ஏங்குகின்ற எளியோரும் இங்கே யுண்டு

 

பௌர்ணமி புன்னகை – அக்டோபர் 2024

 

உதிக்கின்ற சூரியனைப் பூமியது சுற்ற

                  உருப்படியாய் ஓராண்டு ஆகுமெனக் கணித்தோர்

மதியென்னும் முழுநிலவு பூமியினைச் சுற்ற

                 முப்பதுநா ளாகுமென முன்னறிந்தே உரைத்தார்

கதிரொளியை உள்வாங்கி எதிரொளிக்கும் நிலவோ

                  கணிதவியல் கணக்கினிலே நாளொன்றாய் நகர்ந்தே

முதிர்வடையும் காலத்தில் பூமிமுகம் பார்த்து

                  முழுமதியாய் முகம்காட்டி முன்னின்று சிரிக்கும்

 

வான்வெளியின் மேற்றிசையில் வானவன்முன் நகர

                வயல்வெளியில் பயிரினமோ பசுந்தழையை ஆட்டும் 

வான்வீதி முகில்கூட்டம் பின்தொடர்ந்து செல்ல

                வெண்மேகம் சிவப்பேறி மெல்லமெல்ல கருக்கும்

வான்சோலை வனத்தினிலே மையிருட்டும் நேரம்

                வைரமணிக் கற்களோடு முத்துகளும் சிதறும்

வான்பரப்பும் மின்னொளியில் மின்மினியாய் மின்ன

                வளர்ந்துவந்த முழுமதியும் வட்டமுகம் காட்டும்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு 

சிங்கப்பூர்