சனி, 30 செப்டம்பர், 2023

 

தமிழ்மொழி விழா 2023 பொதுப் பிரிவுக்கான போட்டிக் கவிதைகள்

1. அழகோ அழகு (அறுசீர் விருத்தம்)

ஆழிசூழ்ந்து ஆர்பரிக்கும் அலைநடுவே

அங்கமெல்லாம் பச்சைவண்ண ஆடைகட்டி

கீழிருந்து மேனோக்கும் கட்டடமாய்க்

கீறிவைத்த கோடாகக் கிளைபரப்ப

கீழ்திசையில் வீற்றிருந்து கோளோச்சும்

கலைமகளாம் சிங்கையென்னும் திருமகளை

வாழியநின் புகழ்வாழி யவேயென்று

வானுயர வாழ்த்துவதி லுமோரழகு

 

ஓருருவாய் எம்மனத்தில் நிலைபெற்ற

ஒப்பற்ற லீகுவானின் தலைமையாலும்

போருருவாய்ப் பொங்கியெழும் புலியொத்த

பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பினாலும்

பாருக்குள் வளர்ந்ததெங்கள் சிங்கைநாடு

பல்லினத்தார் வாழுகின்ற தேன்கூடு

பேருபெற்ற பழந்தமிழும் ஆட்சியிலே

பங்காற்றும் மொழியென்ப திலுமழகு

 

சீருருவச் செம்மையினைக் கொண்டிலங்கும்

சிங்கையாற்றுக் கரையோரம் நிலைபெற்ற

பேருருவ இராட்டிணத்தின் மீதேறி

பெருந்தொலைவுக் காட்சிகளைக் காணுகையில்

காரிருளைக் கிழித்தெறிந்து ஊடுருவும்

கதிரவனின் ஒளிவீச்சுக் கற்றைகளோ

நீருருவின் நிழல்போல விரிந்திருந்து  

நிலமெங்கும் எதிரொளிப்ப திலோரழகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக