ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

ஆசிரியர் தின வாழ்த்துகள்!


அன்பை அரணாய்க் கொண்டிங்கு
அறிவு புகட்டும் ஆசிரியர்  
பண்பும் பணிவும் தலைத்தோங்க
பரிவை முதலாய்க் கற்பிப்பார்
என்னை உன்னைக் கொண்டிங்கு
      இயங்கு கின்ற வகுப்பறையில்
கன்னித் தமிழால் போதித்துக்
கண்ணிய வாழ்வைப் புகுத்திடுவார்      

நாடும் வீடும் போற்றுகின்ற
நல்ல பண்பை ஊட்டிடவும் 
வாடும் பிள்ளை முகமறிந்து
வாட்டம் போக்கச் செய்திடவும்
பாடும் குயிலின் இராகத்தில்
படிக்கும் பாடம் செய்திடுவார்
வீடு பேரு அடைந்திட்ட
வீரர் கதையும் சொல்லிடுவார்

நானும் நீயும் நம்மவரும்
நலமாய் என்றும் வாழ்ந்திடவும்
மேன்மை கொண்ட மறைதன்னை
      மேதினில் கொண்டு ஒழுகிடவும்
வானும் மண்ணும் பொய்த்தாலும்
வறுமை போக்கத் தெரிந்திடவும்
நானிலம் போற்றும் நல்லறத்தை
      நயம்பட நமக்கு உரைத்திடுவார்

மாண்புறு கொண்ட மானிடரில்
      மதிப்புப் பெற்ற ஆசிரியரே
பேணும் பெற்றோர் இருவருக்கும்
அடுத்த நிலையில் விளங்கிடுவார்
வானில் தோன்றும் வளர்நிலவின்
      வறுமை யில்லாக் குளிரொளிபோல்
காணும் பிள்ளை யாவர்க்கும்
      கருணை யொளியாய்த் தெரிந்திடுவார்

கற்றுத் தேர்ந்த கல்வியோடு
      கேட்டுத் தெளிந்த அறிவினையும்
கற்றுக் கொடுக்கும் ஆசிரியரைக்
      கண்ணாய்க் கருதும் நம்மினத்தில்
உற்றோர் பெற்றோர் உடனிருக்க
ஒருங்கே குவித்த கரம்கொண்டு
பற்றுக் கொண்ட பாசத்தால்
      பணிவு கொண்டு போற்றிடுவோம்


கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக