வெள்ளி, 3 மார்ச், 2023

 3 தூய்மையோடு பாதுகாப்பும் தேவை

 

சிங்கைநகர் தோழரோடு செந்தமிழின் புலவர்களும்

சுற்றுப்புறத் தூய்மையோடு பாதுகாப்பும் தேவையென்று

பொங்குதமிழ்ப் பேச்சினூடே புன்னகையும் சிந்துகின்ற

தங்கநிகர் அருணாச்சலம் நினைவுநாளில் பாடுங்களே!

 

சங்குசிப்பி சங்கமிக்கும் சமுத்திரத்தின் சமவெளியில்

சல்லிகளும் சாக்கடையும் சடுதியிலே பரவுதுங்க

சாராயப் புட்டியோடு குளிர்பானப் புட்டியையும்

சகசமாக வீசுகின்றார் சங்கடத்தைக் கொடுக்கின்றார்

 

காகித்த்தின் கழிவுகளும் நெகிழிப்பை குப்பைகளும்

கணக்கின்றிச் சேருதுங்க கண்முன்னே கிடக்குதுங்க

கண்ணிவலைப் பின்னல்களும் கயிறுவலை முடிச்சுகளும்

கடலுயிரை மாட்டவைத்துக் கண்டபடி வதைக்குதுங்க

 

வான்வெளியும் கடல்வழியும் கழிவாலே கெடுவதற்குத்

தொழிற்சாலை வளர்ச்சியிங்குத் துணையாக இருந்தாலும்

மேலடுக்குக் கட்டடங்கள் மேல்நோக்கி உயருதுங்க

கீழடுக்குக் கட்டுமானம் கீழ்நோக்கிச் செல்லுதுங்க   

 

மரஞ்செடியும் கொடிவகையும் மண்ணிலின்று குறைந்ததனால்

மாசறுக்க மழையின்றி மாசிவெயில் கொழுத்துதுங்க

போக்குவரவு வண்டிகளும் புகைமூட்டம் கக்கியதால்

பசுமைவெளி புற்களுமே பாழ்நஞ்சாய் ஆனதுங்க

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக