திங்கள், 5 அக்டோபர், 2020

 

தலைமுறை இடைவெளி (தந்தையும் மகனும்)

வாழும் வாழ்க்கைப் பாதையில்

      வறுமை வந்த போதிலும்

வாழும் வழியைப் பெற்றிடும்

      வளமை யான கல்வியைக்

காலம் கருதி யளித்திடக்

      குருவைப் போல்தன் கடமையை  

நாளும் செய்து முடிக்கவே

      நல்ல எண்ணம் கொண்டவர்

 

வலிமை குன்றாத் தோற்றத்தில்

      வயதும் முதிர்ச்சி கண்டிட

இளமைப் பொலிவு மறைந்திடும்

      ஈர்க்கும் சக்தி குறைந்திடும்

அலையும் ஆசை மனத்தினில்

      அவல எண்ணம் தோன்றிடும்

முழங்கும் வாஞ்சைப் பேச்சினில்

      முரண்மை சொற்கள் சூழ்ந்திடும்

 

அழகு நிறைந்த பசும்வெளி

      ஆசை மகனோ டமர்ந்திட

அழகு பறவை குருவியும்

      அருகே அமர்ந்து ஒலித்திட

மழலை கேட்கும் கேள்விபோல்

      மாற்ற மில்லாக் கேள்வியைப்

பழமை நினைவில் பலமுறை

      பாச மகன்முன் கேட்டிட

 

பொறுமை யற்ற மகனவன்

      பெரிதாய்க் கத்திப் பேசவே

வெறுப்பைக் காட்டும் மகனிடம்

      வேறு வார்த்தை மொழிந்திட

விருப்ப மில்லாப் பொழுதிலும்

       வளர்த்த வளர்ப்பில் குற்றமோ

பொறுப்பை உணராக் குற்றமோ

       பொதுவி லறிய எண்ணினார்

 

பகைவர் போலப் பேசிடும்

       பெற்ற மகனின் எரிச்சலை

அகற்ற வேண்டும் என்பதால்

       அன்றே அன்பாய் எழுதிய

அகக்கு றிப்பு நூலினை

       அளித்துப் படிக்கக் கூறினார்

அகக்கு றிப்புச் செய்தியை

       அறிந்து கொண்ட மகனுமே

 

பந்த பாசப் பிணைப்புடன்

       பரித விக்கும் முதுமையில்

இந்த உலக வாழ்க்கையை

       ஈகை செய்யத் துணிந்திடும் 

விந்தை மிகுந்த நடத்தையால்

       விலக்க முடியா அன்பினைத்

தந்தை காட்டும் வழியினில்

       தானு மளிக்கத் தொடங்கினான்


                                                      கணேசுகுமார் பொன்னழகு

                                                       சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக