ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 25 (07.06.2020)

'ஒளியும் மனிதர்களும் உலாவரும் மிருகங்களும்'

மரஞ்செடிகள் மலரும் கொடிகள்
மலைகளோடு மண்டி யிருக்க
மிருகமோடு பறவை பூச்சி
மற்றவையும் வாழும் காடு
தரமில்லா மனித னிங்குத்
தமதுநல மொன்றை மட்டும்
பெரும்நோக்காய்க் கொண்ட தாலே
பெரும்காட்டை யழித்து வந்தான்

எல்லையில்லா வலிமை கொண்ட
இயற்கைவனம் வீழ்ந்த தாலே
உள்ளேயிருக்கும் மிருகம் கூட
ஊருக்குள் வந்து உலாவ
தொல்லைபல தந்து தந்து
துன்புறுத்தி நம்மை வாட்ட
வெளியிருக்கும் மனித ரெல்லாம்
விரைந்தோடிச் சென்றே யொளிந்தும்

கொடியநோயாய் உலகில் வந்த
கொரோனாவைப் போன்ற தொற்று
கடுமையான கட்டுப் பாட்டைக்
கடைப்பிடிக்க வைத்த தோடு
உடுத்துகின்ற உடையைப் போலே
உறவுகளைக் களைய வைத்து
முடிவில்லா மரணப் பயத்தை
முளைக்கவிட்டுச் சென்ற திங்கே

இயற்கையோடு இயைந்த வாழ்வை
ஏற்றமாக நினைத்த மனிதன்
செயற்கையிலே விளைந்த வாழ்வைச்
சிறப்பென்று கருதி வாழ
உயர்வான உண்மை வாழ்வும்
உரமில்லா பொய்மை வாழ்வாய்
உயிரற்றுப் போன தாலே
ஓடியோடி ஒளிகின் றானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக