ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 32 (14.06.2020)

'ஒரே ஒருமுறை சுவாசித்துக்கொள்

சைகைகாட்டும் கைபோலச் - சற்று
சாய்ந்திருக்கும் கிளைகளோடு
வைகையாற்றுக் கரையோரம் - பரந்து
வளர்ந்திருக்கு மாலமரம்

கூகைமுதல் குருவிவரை - மிகக்
குதுகலமாய் அமர்ந்திருக்க
தோகைமயில் துடிப்புடனே - தன்
துணையோடு யாடிவரும்

ஆலையில்லா ஆற்றோரம் - மிக
அழகழகாய்ப் பூத்திருக்க
சோலையொன்றை வார்த்ததுபோல் - அந்தச்
சுற்றியுள்ள இடம்மாறும்

மாலைவெயில் மஞ்சளாகிப் - பின்
மையிருட்டாய் மாறயிலே
சோலையெங்கும் பூத்துள்ள - மலர்
சுகந்தத்தைப் பரப்பிவரும்

கொள்ளைகொள்ளு மழகோடு - இந்தக்
குறையில்லா வாசனையும்
எல்லையின்றிப் பரவியவை - இன்று
இல்லாமல் போனாலும்

உள்ளிருக்கு மிதயத்தால் - ஒரே
ஒருமுறைநான் சுவாசித்துக்
கொள்வதற்குச் சுகமான - காற்றுக்
கோர்வையினைத் தேடுகின்றேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக