திங்கள், 24 ஜூன், 2024

 

இயற்கை என்றொரு கவிஞன்

(எண்சீர் விருத்தம்)

 

நிந்தனைக் கப்பால் நினைவுறு முலகில்

நிறைவுறா யியற்கை என்றொரு கவிஞன்

எந்நிலை வந்தும் எத்திசை போயும்

இயம்பிடும் படைப்பாய் எழிலுறும் காட்சி

சிந்தனைக் கினிய விந்தைகள் போல

சிறப்புடன் விளங்கிப் பழம்புகழ் பேசும்

செந்தமிழ் மொழியும் செவ்விய நடையில்

செரிவுடன் திரட்டி யுண்மைகள் சொல்லும்

 

வெந்தணல் தீயாய்க் வெயிலவன் விரைய

விரிகதிர் பரப்பிப் புனலினை யுறிஞ்சும்

மந்தென மாறும் வானிடை யெங்கும்

மையிருள் கொண்டு காரென நகரும்

சிந்திடும் சாரல் தூறலாய்ப் பெய்ய

சிறுதுளி யாகிப் பெருமழை யாகும்

வந்திடும் தண்ணீர் ஆறெனப் பாய்ந்து

வயல்வெளி யெங்கும் வளத்தினைச் சேர்க்கும்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக