வியாழன், 12 செப்டம்பர், 2024

 

சங்கத்தில் பாடாத கவிதை – ஜூலை 2024

(எண்சீர் விருத்தம்)

 

பொங்குதமிழ் பெட்டகத்தின் பொன்மகளாம் பூமகளைப்

புறைதீர்ந்த பொன்மொழியால் பூசித்துப் போற்றுகின்ற

தங்கநிகர் தமிழன்னை தானுரைக்கும்  மொழியாலே

தர்மத்தைத் தலைகொண்டு தரணியெங்கும் தாழ்பதித்தாள்

அங்கமெல்லாம் அணிகின்ற அழகூட்டும் அணிகலனாய்

அகத்தியத்தின் வழிநூல்தொல் காப்பியத்தைக் கொண்டிங்குச்

சங்ககால வாழ்வியலின் சமதர்மச் சமத்துவத்தைச்

செவ்வியலின் செம்மாந்த இலக்கியமாய் வடித்தெடுத்தாள்

 

எங்குமுள்ள இலக்கியங்கள் எழுத்தாக ஏடாக

எவ்வகையில் வந்தாலும் அனைத்துவகை படைப்பினிலும்

வெங்களத்தின் வெற்றியையும் தோல்வியையு முரைத்தாலும்

                  வசந்தகால வாழ்வியலை வகுத்துரைத்தும் பாடினாலும்

சங்கத்தில் பாடாத கவிதைகளின் பாடுபொருள்

                  சகத்தினிலே யில்லையென்று சத்தியமாய் நானுரைக்க

பங்கமில்லாப் படைப்புகளைப் பூமியிலே புழங்கவிட்டு

                  பழமைகளும்  மறையாமல் புதுமைகளைப் புகுத்துகின்றாள்

 

திரு கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக