ஞாயிறு, 6 மே, 2018


அந்த அவள்...

அறுமூன்று வயதுடைய அழகான பெண்ணவளை

அறுமூன்று திங்களாக அன்புடனே காதலித்தேன்

தெருவோரம் நின்றுநான் தினமொரு மலர்தரவே

பருவமுள்ள பெண்ணவளும் பாசமுடன் வாங்கிடுவாள்.


பலநாள் பழகியவள் பண்புடனே விளங்கியவள்

பலவிடமும் வந்து பலகதைகள் பேசியவள்

செலவில்லா இன்பத்தை சிந்தையில் நிறுத்தியவள்

சிலநாள் வாராது சின்னவனைத் தவிக்கவிட்டாள்!


என்னிடம் கொண்ட எல்லையில்லா அன்பைவிட்டு

கன்மனம் கொண்டகதை எப்படித்தான் நான்மறப்பேன்!

நன்றான குணத்தோடு நான்கிலக்க சம்பளமும்

கொண்டவன் இவனெனக் கூடிவாழப் போனவளை


ஓராண்டு முன்னே ஒளிமங்கும் நேரத்தில்

ஆற்றோர விடுதியிலே அரையிருட்டில் கண்டேன்!

யாராக இருக்குமென யான்மீண்டும் பார்க்க

சீரான வாழ்வைவிட்டுச் சீரற்றே நின்றாள்.


நானருகில் சென்றபோது, நயனத்தை ஈரமாக்கி

நானன்று பிறப்பதற்கு நல்வினை யாற்றியவர்

நானுனை மறப்பதற்கும் நஞ்சுவினை யாற்றியதால்,

நானின்று விடுதியிலே நானிழந்த பாவியானேன்!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக