சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 13 (13/04/2021)

தலைப்பு : விடியாத இரவில்லை 

 

கருத்தான காவலோடு காலங்களும் மாறித்

தெருவெங்கும் சுற்றிவந்து பார்த்தும் – பெருகும்

கொடிதான குற்றங்கள் கூடினாலும் பாரில்

விடியா இரவில்லை நம்பு

 

குறையாத கோபத்தைக் கொண்டவர் நெஞ்சில்  

மறையாத எண்ணங்கள் மாறும் – கறையாய்ப்

படியாமல் உள்ளத்தில் ஊர்ந்தாலும் மண்ணில்

விடியா இரவில்லை காண்

 

கருவாகும் மேகங்கள் வானின்று பொய்க்க

உருவாகும் வேளாண் பயிர்கள் -  தலைக்க  

முடியாத சூழல்கள் ஆனாலும் நித்தம்

விடியா இரவில்லை பார்

 

கயவர்கள் கண்முன்னே காட்சிதர உள்ளப்

பயம்கொண்டு வாழும் மனிதன் – முயற்சி

படியேறிப் பக்குவமாய் வாழ்ந்தாலும் நாட்டில்

விடியா இரவில்லை பார்

 

நம்பியவர் நாசமாகி நம்மைவிட்டுப் போனாலும்

நம்முள் இருக்கின்ற மாண்புகளை – தம்முள்

மடியவைத்து தற்காத்துக் கொண்டாலும் பாரில்

விடியா இரவில்லை காண்

 

கணேசுகுமார் பொன்னழகு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக