சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 14 (14/04/2021)

தலைப்பு : அன்பெனும் மழை

 

விரும்பும் ஆணின் வரவைக் கண்டு

விரவும் நெஞ்ச ஆசை களோடு

அரும்பு கின்ற முல்லை மலரின்

அழகு மொட்டாய் முன்பல் சிரிப்பும்

கரும்பின் சுவையாய் இனிக்கப் பேசும்

கன்னிப் பாவை காந்த விழியின்

குறும்புப் பார்வை கொண்டு சிணுங்கும்

குமரிப் பெண்ணின் கோல வடிவும்

 

கள்ள மில்லாக் காளை நெஞ்சில்

காட்டு வெள்ளம் போல வந்து

தள்ளிக் கொண்டு போகும் போது

தடுமாற் றத்தில் தத்த ளிக்க

அள்ளி யெடுத்து அரவ ணைத்து

ஆசை யோடு கொஞ்சிப் பேச

துள்ளி யாடும் மனத்தி னூடே

தூவி டுமேஅன் பென்னும் மழையை

 

கிள்ளிக் கொஞ்சி கடிந்து கொள்ள

கிடைத்த நேரம் கொஞ்ச மெனினும்

துள்ளும் ஆசை கோடி வந்து

துடிக்கும் நெஞ்சில் ஆழப் புகுந்து

எல்லை யில்லா இன்ப மாக

இதயம் தன்னில் பெருகும் போதும்

இல்லை யென்ற எண்ணம் தோன்றி

இரந்தி டுதேஅன் பென்னும் மழையை

 

பருவப் பெண்ணின் பார்வை பட்டு

பாச மென்னும் பரிவைக் கேட்க

குருத்து போன்ற எந்தன் நெஞ்சில்

குத்தும் கண்ணால் கூர்மை காட்ட

உருவம் நலிந்து மெலிந்து போக

உள்ளம் மட்டும் உன்னில் வாட

அருவ மில்லா ஆசை கொண்டு

அலைந்தி டுதேஅன் பென்னும் மழையில்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக