சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 12 (12/04/2021)

தலைப்பு : கவிதை என் காதல்

 

எழுத்துச் சீரோடு அசைகூட்டி மொழிக்கு

ஏற்ற தளையாலே அடியாக்கி அமைய

எழுதும் போதிலது சந்தத்தின் இசையை

இட்டு நிரப்பிடவே இன்பத்தை இழையவிட்டு

பழுது ஏதுமில்லா பொருளூட்டும் சொற்களால்

படைக்கும் பாவலர்தம்  பைந்தமிழின் கூட்டே

கொழுத்தும் வெயிலுக்கோர் நிழலூட்டும் ஆல்போல்

கிளைகள் பரப்பிநிற்கும் கவிதையென்னும் பாட்டு

(வேறு)

உள்ளம் உறைந்த மனிதர் கூட

உடைந்து நெஞ்சா லுருக எந்தன்

உள்ளம் தொட்டு உண்மை கண்டு

உருத்து கின்ற செய்தி யெல்லாம்

வெள்ளம் போல விரவி டுமாறு

விவர மான வார்த்தை கொண்டு

நல்ல முறையில் கருத்துச் சொல்லி

நறுக்குத் துடுக்காய்க் கவிதை சொல்வேன்

 

பள்ளம் மேடு பார்த்து ஏறிப்

பாறை யுச்சி சென்ற தெல்லாம்

அல்லி மலரும் அரும்பும் காட்சி

      ஆசை மனத்தில் பதியும் நேரம்

வெள்ளம் பாயும் ஆற்றின் அழகும் 

      வீழும் அருவி விரையும் அழகும்

துள்ளித் திரியும் மானும் மீனும்

      துரத்திப் பிடிக்கும் சிறுவர் கூட்டம்

 

கொள்ளை கொள்ளும் குமுகக் காட்சி

      கொஞ்சும் நெஞ்சில் கூடி வந்து

வெள்ளம் போல பாய்ந்து வந்து

      வெறுமை நெஞ்சில் குடியும் கொள்ள

கள்ள மில்லா உள்ளம் கொண்டு

      கண்ணில் காணும் காட்சி யாவும்

நல்ல முறையில் நாளும் சொல்லி

      நன்றாய்க் கவிதை நானும் படைப்பேன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக