ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 30 (12.06.2020)

'அறைக்குள் சுழலும் உலகம்'

அன்னையவள் கருவறையில்
அடையாள மேதுமின்றிப்
பிண்டமாக வளர்ந்தவுடல்
பூமியிலே பிறந்தபின்னே
கண்டபடி நோவாமல்
கறையேதும் நேராமல்
கண்ணியத்தைக் கடைப்பிடித்துக்
கடமையினை யாற்றிடவே

எண்ணியவர் எத்தனையோ
ஏங்கியவர் எப்படியோ
கண்ணாடி காட்டுகின்ற
களங்கமில்லா வுருவம்போல்
முன்னாடி  வாழ்ந்தவரின்
முறையான வாழ்வுதனை
முன்னோடி யாய்க்கொண்டு
முனைகின்ற மாந்தரோடு

அண்டத்தில் வாழ்கின்ற
அனைத்தினத்து மக்களையும்
துண்டாடி வைத்துள்ள
தொற்றுநோயாம் கொரோனாவைக்
கொண்டவர்க ளுடலைவிட்டுக்
குறையில்லா வுயிர்போக
கண்டவர்கள் குலைநடுங்கிக்
குற்றுயிராய்க் கிடந்துருக

விண்டவர்கள் வேற்றுயிராய்
வெறுமையிலே வெந்துருக
கண்ணுக்குத் தெரியாத
கடுந்தொற்றுக் கிருமிவந்து
அண்டாம லிருப்பதற்கு
அரசாங்கம் ஆணையிட
கொண்டாட்ட மேதுமின்றிக்
குடிலுக்குள் குந்திட்டார்

காலைமுதல் மாலைவரை
குடும்பத்தார் நெருக்கமின்றி
வேலைக்குச் சென்றவர்கள்
வீட்டிற்குள் முடங்கினாலும்
வேளையெல்லாம் விரைந்தோடி
வீணாகக் கரையாமல்
நாளைவரும் விடியலுக்கு
நம்பிக்கை வைத்ததோடு

கணினியோட வுதவியாலே
கணக்கில்லா மக்களிங்குப்
பணியாளர் வேலைமுதல்
பார்வையாளர் திருத்துகின்ற
பணிப்புரையும் பார்த்தவுடன்
பயமின்றிச் செய்வதற்குப்
பிணிபோக்கும் மருந்தாகப்
பிழையின்றி யமைந்ததாலே

கண்கொத்திப் பாம்பாட்டம்
காத்திருந்து படம்பிடிக்கும்
கண்காணிப் பியந்திரத்தின்
கவலைகளோ சிறிதுமின்றி 
அன்றாடம் செய்கின்ற
அலுவலக வேலையெல்லாம்
நன்றாகச் செய்கின்றார்
நான்குசுவர் அறைக்குள்ளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக