ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 9 (22.05.2020)

'கனவுகளின் கருணை'

இன்பத்தை இழையவிட்டு
இரக்கத்தைப் பொழிகின்ற
எண்ணத்தில் தோன்றுகின்ற
எல்லையில்லா ஆசைகளை
அன்னமெனப் பிரித்தெடுக்க
அலைபாயும் உள்ளத்தில்
கண்மூடிக் காண்கின்ற
கனவுக்கும் கருணையுண்டு

பட்டங்கள் பலபெற்றும்
பாரினையே சுற்றிவந்தும்
சட்டங்கள் போடுகின்ற
சான்றோரின் சிந்தையிலும்
திட்டங்கள் தீட்டுகின்ற
திறனாளர் சிந்தையிலும்
கட்டொழுங்காய் விளைகின்ற
கனவுக்கும் கருணையுண்டு

விண்வெளியில் நடக்கின்ற
விஞ்ஞான நிகழ்வுகளை
மண்பரப்பில் வாழ்கின்ற
மனிதரிடம் உரைப்பதற்கு
உண்டான உரைநூலை
ஓதிடவே முயல்கின்ற
உண்மையென்னும்  கனவிற்கும்
ஒளிவிளங்கும் கருணையுண்டு

மனத்தினிலே தோன்றுகின்ற
மாசில்லா எண்ணமது
உணர்வுகளின் உள்ளீடாய்
உள்ளத்தில் ஒலித்தாலும்
குணமென்னும் குன்றேறி
கருணையுடன் வாழ்ந்தாலும்
நினைவுகளே கனவுகளாய்
நிலைபெற்று நின்றிடுமே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக