ஞாயிறு, 21 ஜூன், 2020





நாள் 26 (08.06.2020)

'மூச்சில் அணையும் மெழுகுவர்த்திகள்'

தொற்று நோய்கள் தொற்றுமென்ற
துன்பம் நிறைந்த பொழுதினிலும்
வெற்றுப் பேச்சுப் பேசாமல்
வெள்ளை மனத்தால் நோவாமல்
பற்று மிக்கச் சேவையாலும்
பரிவு கொண்ட கருணையாலும்
சுற்றுப் புறத்தைத் தூய்மையாலே
சொர்க்க மாக்கித் தருவதற்கு

மெழுகாய் உருகும் மானிடரின்
மேன்மைக் குணத்தை யென்றென்றும்
கொழுவாய் வைத்தே யலங்கரித்துக்
குவித்த கரத்தால் போற்றாமல்
பழுது நிறைந்த எண்ணத்தால்
பரவச் செய்யும் மூச்சுகூட
வழுக்கல் நிறைந்த நெஞ்சத்தின்
வாய்மை யில்லா மூச்சாகும்

                           (வேறு)

மெழுகு வர்த்தியே மின்விளக்காய்
மிளிரும் குடிசைகள் பலவிருக்க
கொழுப்பு மேலிடக் கோள்மூட்டும்
குற்றச் செயலினை யெடுத்துரைப்பான்
குழுவாய் வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
குறைகள் நீக்கிட வாழ்பவனைச்
செழுமை குன்றிய போதினிலும்
சீர்மை மிகுந்திட வாழ்த்துரைப்பான்

சிறுமை மிஞ்சிடும் செயலினையே
சின்ன மதியினர் செய்தாலும்
பொறுமை காத்திடும் செயலாலே
புத்தன் இவனெனக் காட்டிடுவான்
வறுமை சூழ்ந்திடும் வேளையிலும்
வாய்மை தவறிடா வாழ்வினையே
சிறிதும் குறைத்திட மனமின்றிச்
சிரமம் நேர்ந்திட வாழ்ந்திடுவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக