புதன், 29 டிசம்பர், 2021

 

'கொன்னோய் கொரோனா'

 

செம்மை யில்லாத் தொற்றொன்று

செகத்தில் தோன்றிப் பரவிடவே

வெம்மை யூட்டும் கொரோனாவாய்

விரைந்து வந்து தாக்கியதால்

தும்மல் இருமல் சளியாகித்

தொடர்ந்து நெஞ்சில் குடியேற

நம்மை விட்டு அகலாது

நாளும் உயிரைப் பறித்ததுவே

 

பெற்றோர் பிறந்தோர் மற்றோரும்

பக்கம் இருந்து பார்த்திடவும்

பெற்று வளர்த்த பிள்ளைகளும்

பின்னே இருந்து தேத்திடவும்

உற்ற துயரில் பங்குற்று

உயிரை மீட்க உதவிடவும்

சற்றும் வாய்ப்பை வழங்காது

சாவின் மடியில் வீழ்த்தியதே

 

பொன்னும் பொருளும் கொடுத்தாலும்

புண்ணியம் கூடச் செய்தாலும் 

கொன்னோய் தந்த கொரோனாவும்

      கொடுங்கோல் காட்டி மிரட்டியதே

ஒன்றா மிரண்டாம் அலைகளென

      உருவம் மாறி வந்திங்கு

ஒன்று மறியா மழலைகளின்

      உயிரைப் பறித்துச் சென்றதுவே

 

வித்தாய் விளங்கும் பிள்ளைகளை

வீழ்ந்தி டாமல் காப்பதற்கு

மொத்த மாகக் கூடுகின்ற

முட்டாள் தனத்தை விட்டொழித்துக்

கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கும்

கொன்னோய் கொரோனாக் கிருமியினைச்

சுத்த மாகத் துடைத்தொழிக்க

சொந்த முயற்சி எடுத்திடுவோம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக