வியாழன், 12 செப்டம்பர், 2024

 

மணவாழ்த்துப் பாடுகின்றோம்

                      (எண்சீர் விருத்தம்)

பல்லிசை வல்லோர் தாள மிசைக்க

பாவையர் கூட்டம் பாட்டுப் பாட

பல்திறன் கொண்ட காளை யரெல்லாம்

பாட்டுடன் நடனம் ஆடித் திளைக்க

கல்லினில் வடித்த சிலைபோல் தோன்றும்

கவினுரு காதலன் கடைக்கண் காட்ட

வில்லினை யொத்த புருவ முயர்த்தி

வெண்கரு விழியாள் வியப்பைக் காட்ட

 

அருட்பெரும் ஆன்றோர் அடிகள் முன்னே

ஆவணித் திங்கள் இருபத் திமூன்றில்

திருநிறைச் செல்வன் விக்னேஷ் கரத்தில்

திருமண நாணை எடுத்துக் கொடுக்க

திருவளர்ச் செல்வி ரம்யா கழுத்தில்

திருமறை பாடித் திருநாண் பூட்ட

இருமனம் ஒன்றாய்க் கலந்தே இணைந்து

இல்லற வாழ்வை இனிதே தொடங்கும்

 

மணவிழா நிகழும் நன்னா ளின்று

மதிநிறை பெரியோர் வந்து கூடி

மனங்கவர் மறைநூல் விளக்கும் பொருளில்

மங்களச் சொற்கள் சொல்லிப் போற்ற

மணவினை கொள்ளும் மணாளன் மணாட்டி

மாண்புடன் என்றும் வாழ வேண்டி

மனம்தொடும் சொல்லால் வாழ்க வென்று

மகிழ்வுடன் வாழ்த்துப் பாடு கின்றோம்

திரு கணேசுகுமார் பொன்னழகு - சிங்கப்பூர்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக