வியாழன், 8 மே, 2025

 

எழுத்தறிவித்தவர் – செப்டம்பர் 2024

 

அகரத்தில் அடியெடுத்து னகரத்தில் இறுவாகும்

அனைத்துவகை யெழுத்துகளின் ஒலியளவு மாறாது

அகத்தினுள்ளே பதியவைத்து அறிவோனாய் ஆக்குகின்ற

அளப்பரிய ஆற்றலினைப் பெற்றிலங்கும் பெருந்தகையும்

மகத்தான மறைநூல்கள் கொண்டுள்ள கருத்துகளை

மனிதத்தின் மாண்புகளாய்க் கற்பிக்கும் அறச்செயலை

உகந்தபடி செய்கின்ற உய்வில்லா உத்தமரும்

உலகத்தார் போற்றுகின்ற எழுத்தறிவித் தவராவார்

 

எண்ணுகின்ற எண்ணமதை எழுத்துகளில் எழுதிடவும்

எழுதியதைச் சொல்லாக்கி எளிதாகச் சொல்லிடவும்

பண்பாட்டுப் பழக்கமதைப் பணிவுடனே கடைப்பிடிக்கும்

பாமரரும் பரம்பரையாய் எடுத்தியம்பித் தொடர்ந்திடவும்

கண்ணிருந்தும் குருடராகக் காலமெல்லாம் இருக்காமல்

கல்லாரும் வித்தைகளைக் கற்றறிந்து பகிர்ந்திடவும்

எண்கூட்டிக் கணக்கெழுதும் சூத்திரத்தைக் கற்றிடவும்

இயம்புகின்ற ஆசிரியர் எழுத்தறிவித் தவராவார்

 

 

 

திரு கணேசுகுமார் பொன்னழகு 

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக