வெள்ளி, 4 ஜூன், 2021

நாள் : 25 (25/04/2021)

தலைப்பு : அந்த ஒரு நொடி

 

அந்தரத்தி லழகழகாய்ச் சுழலுகின்ற

அனைத்துவகை கோளினங்க ளிருந்தாலும்

சொந்தமாகச் சுழல்வதற்குத் தோதான

சூட்சமங்கள் நிறைந்தாலும்

அந்தவொரு நொடியின்றி யவையெல்லாம்

அண்டமதன் வெளிதன்னி லியங்காது

எந்தவொரு நிலைதனிலு மீடற்ற

இயற்கையோடு  சேர்ந்தியங்க முடியாது

 

அன்னையவள் ஆசையாக யீன்றெடுக்கும்

அந்தவொரு நொடிகூட மாறுவதால்

எண்ணத்தில் எழுகின்ற முடிவுகளில்

ஏற்றங்கள் இறக்கங்கள் இருந்துவிடும்

கண்மூடித் திறப்பதற்கு ளாற்றுகின்ற

கடமைகளும் கணக்கின்றிச் சேர்ந்துவிடும்

மண்ணுக்குள் மறைந்துள்ள மாட்சிமைகள்

மண்மீது வரும்காலம் மாறிவிடும்

 

கணேசுகுமார் பொன்னழகு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக