வெள்ளி, 4 ஜூன், 2021

நாள் : 20 (20/04/2021)

தலைப்பு : தோலுரித்து வெளியேறும் உடற்கூடு     

 

ஓரறி வுயிர்முதல் ஆறறி வுயிர்வரை

உலகினில் உண்டென மானிடா உணர்ந்திடு

ஊரினில் உயர்ந்திட உண்மைகள் பேசியே

உழைப்பவர் நெஞ்சிலே உரிமையாய் நுழைந்திடு

பாரினில் விளங்கிட பார்ப்பவர் உளமதில்

பணிவுடன் தோன்றியே பாங்குடன் கலந்திடு

பேரினைப் பெற்றிட பெற்றவர் சொற்படி

      பொறுமையும் கொண்டுநீ பொறுப்புடன் வாழ்ந்திடு

 

கருவினில் வளர்ந்திடும் பச்சிளம் சிசுமுதல்

கல்லறை சேர்ந்திடும் பெரியவர் கள்வரை

உருவினில் பெற்றிடும் தோற்றமும் மாற்றமும்

உளமதும் கொண்டிடும் உண்மையை அறிந்திடு  

தெருவினில் கண்டிடும் சிற்றுயிர் யாவையும்

தமக்கென இருப்பிடம் உணவுக ளிரண்டையும்

செருக்கினை விளக்கியே விருப்புடன் பெற்றிடும்

செம்மையை யறிந்திடு சிறப்புடன் வாழ்ந்திடு

 

உடலினில் அடங்கிய மூச்சது நீங்கிட

உறவுகள் கூடியே ஓவென அழுதிடும்

திடமென விளங்கிடும் தீரரின் பலத்தினில்

திறமெனக் கொண்டுபோய்க் காட்டிடை வைத்திடும்

கடலெனும் கரைதனில் காரிய மாற்றிட

குடும்பமும் கூட்டமாய்க் கூடியே கலைந்திடும் 

உடலெனும் கூட்டினுள் போர்த்திய தோலது

உரிந்திட உருவிலாக் கூடென மாறிடும்

 

கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக