வெள்ளி, 4 ஜூன், 2021

நாள் : 28 (28/04/2021)

தலைப்பு : மனம் மூடிய முகமூடிகள்

 

மனத்தினதன் மாட்சிமைகள்

மானிடர்க்குக் கிடைத்தவரம்

சினமென்னும் குணம்நீங்கின்

சீற்றமில்லா சீர்மையுறும்

வனத்தினது வளமைக்கு

வண்டுகளின் வாழ்வினறம்

தினந்தோறும் தொடர்ந்திடவே

திக்கெங்கும் சோலைவனம்

 

மனிதராகப் பிறந்தவர்கள்

மயக்கத்தில் இருந்தாலும்

புனிதராக வாழ்பவர்கள்

புண்ணியங்கள் செய்தாலும்

தனிமையான சூழலைத்

தமக்காக யுருவாக்கி

இனிமையோடு மிளமையோடும்

இன்னலின்றி மகிழ்ந்திடுவர்

 

மண்மீது நடக்கின்ற

முறையற்ற செயல்களையும்

கண்கொண்டு பார்த்தாலும்

மனம்மூடி யிருந்தவர்கள்

வன்குணத்தார் வீழ்வதற்கு

வினையேதும் செய்யாது

முன்னேற்றம் காண்பதற்கு

முகமூடி யணிகின்றார்

 

அகம்தோன்றும் ஆசைகளை

அடக்கியாளும் அன்பரிடம்

சகயாளாய்ப் பழகிடவே

சன்யாச சாமியாராய் 

முகமூடி யணிந்தாலும்

முன்நடக்கும் தவறுகளைச்

சகசமாகக் கொள்ளாது

சிரம்தாழ நாணிடுவார்

 

கணேசுகுமார் பொன்னழகு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக