புதன், 28 செப்டம்பர், 2016

              நாடகம்

             ஒற்றுமையே உயர்வுக்கு வழி

                      காட்சி 1

இடம் :      உயர்நிலை பள்ளி வளாகம்      
காலை :    உணவு இடைவேளை
நடிகர்கள் :  அன்பு, அசன், ஆகியோர்.

    (உயர்நிலை இரண்டு படிக்கும் அன்பு தன் நோட்டு புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் அசன் அன்புடன் பேசுகிறான்.)

அசன் :      அன்பு! அன்பு!! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

அன்பு :      இம் பல்லாங்குழி விளையாடுகிறேன். என்ன என்னைப்  
             பார்த்தால் உனக்குக் கிண்டலாக உள்ளதா?

அசன் :      இல்லை நண்பா நீ எதோ எழுதிக் கொண்டிருக்கிறாய் என்பது
             தெரிகிறது. ஆனால் அது என்னவென்றுதான் தெரிய வில்லை.

அன்பு :      நேற்று நம் தமிழ் வகுப்பில் தமிழாசிரியர் ஒற்றுமையே உயர்வுக்கு
             வழி என்ற தொடருக்கு அதற்கான விளக்கம் சொன்னாரில்லையா?  
             அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அசன் :      உனக்கென்ன வகுப்பிற்கு வெளியேயும் எதையாவது
            எழுதிக்கொண்டே இருப்பாய். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.

அன்பு :      ஆமாம் இவ்வளவு நேரம் நீ எங்குச் சென்றாய்?

அசன் :      உணவுக் கடைக்குச் சாப்பிட சென்றேன். உனக்கும் ஏதாவது
            வாங்கி வரவா?

அன்பு :     வேண்டாம் நம்முடைய தமிழாசிரியர் சொன்ன தலைப்பில் கட்டுரை
            எழுதுவதைப் பற்றிப் பேசுவோம்.

அசன் :      சரி எதுவாக இருந்தாலும் நடந்துகொண்டே பேசுவோம்.
            அப்போதுதான் எனக்குச் செரிமானம் ஆகும்.

அன்பு:      சரி நான் உன்னுடைய வழிக்கே வருகிறேன். நடந்துகொண்டே
            பேசுவோம். ஆனால், அது கட்டுரையைப் பற்றியதாக மட்டும்தான்
            இருக்கவேண்டும்.

                          காட்சி 2

இடம் :      உயர்நிலை பள்ளி மைதானம் நடைபாதை
நடிகர்கள் : அன்பு, அசன், எழில்மதி ஆகியோர்.

(அன்பும் அசனும் பள்ளி மைதான நடைபாதை வழியாகப் பேசிக்கொண்டே நடந்து செல்கின்றனர் அப்போது அவர்களுடைய வகுப்புத் தோழி எழில்மதி வருகிறாள்.)

அசன் :     என்ன அன்பு சொல்கிறாய்? கட்டுரையா அவர் அப்படி எதுவும் எழுதச்
            சொல்லவில்லையே.

அன்பு :     ஆம் எழுதச் சொல்லவில்லை. இருந்தாலும் அவர் சொன்ன அந்த
            விளக்கம் என் மனத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனவே  
            அதனைக் கட்டுரையாக எழுதுகிறேன்.

எழில்மதி:  அன்பு! அசன்! இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கீறீர்கள். உங்கள் 
            உரையாடலில் கலந்து கொள்ளாலாமா?

அசன் :      யாரு எழிலா வா வா இவ்வளவு நேரம் எங்குச் சென்றாய்?

எழில்மதி : உணவுக் கடைக்குச் சாப்பிட சென்றேன். உங்களுக்கு ஏதாவது வாங்கி    
            வரவா?

அசன் :      நானும் உணவுக் கடையிலிருந்துதான் வருகிறேன் அங்கு உன்னைப்  
            பார்க்கவில்லையே?

எழில்மதி :  ஓ அதுவா? நான் மீனாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீ 
            கவனித்திருக்கமாட்டாய்.

அன்பு :      அவன் சாப்பிடுவதிலேயே குறியாக இருந்திருப்பான் அதுதான்
            உன்னைக் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

அசன் :     உனக்கு என்னைக் கேலி செய்யவில்லையென்றால் உறக்கம் வராது?
            சரி அப்படி என்ன செய்தியைக் கட்டுரையில் எழுதுகிறாய். சொல்
            பார்ப்போம்.

எழில்மதி :  என்ன? கட்டுரை எழுதுகிறாயா?

அசன் :      ஆமாம் அன்பு கட்டுரை எழுதுகிறான்அதைப் பற்றிக் கேட்போம்.

எழில்மதி : அப்படியா அன்பு எங்கே சொல் பார்ப்போம்.

அன்பு :     வேறோன்றும் இல்லை நம் சிங்கப்பூரில் பல இன மக்கள் இணைந்து
            ஒற்றுமையுடன் வாழ்வது பற்றித் தான் எழுதுகிறேன்.

அசன் :     இதில் என்ன இருக்கிறது. இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்தாலும்
            அவரவர் வாழ்க்கை அப்படியேதானே இருக்கிறது.

அன்பு :     என்ன இப்படி சொல்லி விட்டாய். தனி நபருடைய ஒவ்வொரு
            உழைப்பும் ஒன்று சேர்ந்ததால்தான் நம்நாடு உலக அரங்கில் ஒரு
            முன் மாதிரியாக உள்ளது.

அசன் :      அப்படியென்றால் நாடு முன்னேற்றம் மட்டும் போதும் நாம் உயர்ந்து
            விடலாம். நம் உழைப்பு தேவையில்லை அப்படித்தானே

அன்பு :      ஆம் நண்பா வரப்பு உயர்ந்தால் நெல் உயரும் என்ற
            பொன்மொழியைக் கேட்டதில்லையா?

அசன் :      இப்ப என்ன சொல்ல வருகிறாய். நான் எதையோ கேட்கிறேன். நீ
            வரப்பு நெல் என்று எதையெதையோ சொல்கிறாய். ஒன்றும்
            புரியவில்லை.

அன்பு :     அவரவர் வாழ்க்கையை மட்டும் பார்க்காதே நம் நாட்டின்
            ஒற்றுமையால் உண்டாகும் முன்னேற்றத்தையும், உயர்வையும் பார்.
            நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.

எழில்மதி : சரி அப்படியே நாம் ஒற்றுமையுடன் இருந்தால் என்ன என்ன
            நன்மைகள் உண்டாகும்.

அன்பு :     நாம் ஒற்றுமையுடன் இருந்தால் நாம் நாடு சண்டைச் சச்சரவு
            இல்லாத நாடாக விளங்கும். அமைதி நிலவும். மனிதபிமானம் 
            வளரும். நம் நாட்டின் ஒற்றுமையைக் கண்டு பிற நாட்டவரும்
            போற்றுவர். துணிந்து வந்து நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத்  
            துணை புரிவர்.

அசன் :      அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்.

அன்பு :     இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் இந்நாடு என்னுடைய நாடு.
            இந்நாட்டினுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் நானே பொறுப்பு என்ற
            மனப்பக்குவம் வளர வேண்டும்.
            இங்கு வாழும் யாவரும் என்நாட்டு மக்கள் என்ற உறுதிப் பாட்டை
            எடுக்க வேண்டும்.

அசன் :     அடேங்கப்பா! இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? பரவாயில்லை 
            இன்று உணவு இடைவேளை  பயனுள்ளதாகவே இருந்தது.

எழில்மதி : ஆம் அன்பு பயனுள்ளதாகவே இருந்தது. சரி சரி வாருங்கள் நாம்
           கணக்குப் பாட வகுப்பிற்கு நேரமாகிவிட்டது.

அன்பு :    வாருங்கள் செல்வோம்.

             (மூன்று பேரும் வகுப்பிற்குள் நுழைகிறார்கள்)

                       காட்சி முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக