செவ்வாய், 20 செப்டம்பர், 2016

என்னுடைய இலக்கு 

என்னிலக்கு எதுவென்று என்னுள்ளம் நினைத்தபோது

      எண்ணற்ற இலக்குகளும் என்மனத்தில் வந்ததுண்டு

இன்தமிழை நான்படித்து இலக்கியங்கள் கற்றதனால்

      எனக்கான இலக்குகளை எவையென்று அறிந்துகோண்டேன்


மயிலோடும் குயிலோடும் மணம்வீசும் மலரோடும்

      மயங்கிட்ட உள்ளத்தை மாசற்ற இலக்கியமாய்

உயிரோடு உளம்கலந்து உருவாகக் கொடுத்தவரை

      ஒருபொழுதும் மறவாது உயர்வாகப் போற்றிடுவேன்


தேனூரும் தீந்தமிழைத் தெவிட்டாத இலக்கியமாய்த்

      தினந்தோறும் பாடிவைத்த திருவாளர் புகழோடு

நானறிந்த நறுந்தமிழை நாளைவரும் மாணவருக்கு

      நல்லமுதாய்ப் புகட்டிவிட நயம்படவே நானுரைப்பேன்


ஏட்டிலில்லா இலக்கியமும் ஏட்டிலுள்ள இலக்கியமும்

      எடுத்தியம்பும் கூற்றோடு எல்லையில்லா பொருளினையும்

நாட்டிலுள்ளோர் அறிந்திடவே நன்மைபல புரிந்திடவே

      நனித்தமிழைக் கற்பிக்கும் நல்லபணி செய்திடுவேன்


கணக்கில்லா இலக்கியங்கள் கடல்மூழ்கிப் போனதென்று

      காதுவழிச் செய்தியொன்று கதையாக நமக்கிருக்க

கணக்கிருக்கும் இலக்கியங்கள் கட்டழிந்து போகாமல்

      கணினியிலே அச்சேற்றும் கடும்பணியை ஆற்றிடுவேன்


அவனிபோற்றும் எம்மொழியாம் அமிழ்தான தமிழ்மொழியில்

      அறிவார்ந்த அழகோடு அமைந்திட்ட படைப்புகளைப்

புவிபோற்றும் படைப்போடு பொருத்தித்தான் பார்த்திடவும்


      புத்தாக்கம் பெற்றிடவும் புதுமுயற்சி செய்திடுவேன்

                                                      கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக