புதன், 3 பிப்ரவரி, 2016


      உருவம் தீய்ந்த பிஞ்சுகள் 

கோவில்கள் நிறைந்த ஊராம்
          கும்பகோண மென்னும் பேராம்
தாவிநாம் எட்டு வைத்தால்
          சரசுவதி பள்ளிக் கூடம்
கூவியழும் கூக்குரல் கேட்டுக்
     கூடுகின்றார் மக்கள் எல்லாம்
கேவியழும் சத்தம் கூடக்
     கெடுவைத்தும் ஓய வில்லை

பள்ளிக் கூடம் தீப்பற்ற
     பதறிப் பிள்ளை களோடிவர
கள்ளிக் காட்டில் விட்டதுபோல்
     கண்கள் இரண்டும் அலைமோத
நல்ல பாதை இல்லாது
     நலிந்த வழியில் மாட்டிவிட
கல்வி கற்கப் போனபிள்ளை
     கருகித் தானே போனதைய்யா

உதவி செய்ய யாருமற்று
     உழன்று துடித்த பிஞ்சுகளைப்
பதறி ஓடி தூக்கிறப்போ
பாவம் உயிரும் போனதைய்யா
கதறச் செய்யும் இந்நிகழ்வால்
     காண்போர் நெஞ்சை உலுக்குதைய்யா
உதறல் எடுக்கும் இச்செய்தி
     உலகை வாட்டி வதைத்தைய்யா

அள்ளிக் கொஞ்சி ஆர்பரித்து
     அன்பு கொண்டு சேர்த்தணைத்து
உள்ளம் மகிழ வளர்த்தபிள்ளை
     உருவம் தீய்ந்து போனதைய்யா
பள்ளிக் கூடம் போனபிள்ளை
     பரித வித்து செத்தகாட்சி
சுள்ளிக் குவித்து எரித்ததுபோல்
     சோகம் நெஞ்சை வாட்டுதைய்யா

பள்ளி போறே னென்றுசொல்லிப்
     பாடப் பைதூக் கிச்செல்லும்
கள்ள மில்லாச் செல்வத்தைக்
     கட்டி யணைத்து வழியனுப்ப
துள்ளி ஓடும் அழகுபிள்ளை
     தீயில் வெந்து மடிந்தகாட்சி
துள்ளத் துடிக்க வைத்தென்னை
     துவண்டு போகச் செய்ததைய்யா

கிள்ளிப் பழகும் குறும்புகளைக்
     கீர்த்தி பொங்க பேசிடும்தன்
கள்ள மில்லாப் புன்சிரிப்பில்
     கவலை மறக்கச் செய்தபிள்ளை
கொள்ளி வாய்க்கு இறையாகக்
     கூட்டுப் புழுவாய் விழுந்தகாட்சி
உள்ளம் உறையச் செய்ததிப்போ
     உருவ மற்றுப் போனதைய்யா

பொன். கணேசுகுமார்
வெள்ளிக்குறிச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக