புதன், 3 பிப்ரவரி, 2016


மனிதநேயம் மலரட்டும்

 
மலரட்டும் மலரட்டும்

      மனிதநேயம் மலரட்டும்

ஒழுக்கமின்றி விழுப்பமின்றி

      ஒழுங்கான நெறியுமின்றி

அழுக்கான மனத்தோடு

      அழல்கின்ற மாந்தரிடம்

மலரட்டும் மலரட்டும்

      மனிதநேயம் மலரட்டும்!

 
பிறந்தபிள்ளை பெண்ணென்று

      பெருமைகொள்ளாப் பித்தர்க்கும்

எருக்கம்பால் கொடுத்துயிரை

      எமன்போலே பறிப்போர்க்கும்

இரக்கமற்ற செயலாலே

      இறந்தேதான் வாழ்வோர்க்கும்

உறைந்திருக்கும் உள்ளத்தில்

      ஊரட்டும் மனிதநேயம்

 

கஞ்சிக்கும் வழியின்றி

      காய்ந்திருக்கும் நம்நாட்டில்

பிஞ்சென்றும் காயென்றும்

      பேதமின்றிக் கொல்கின்ற

நஞ்சென்ற தீவிரவாதம்

      நாட்டைவிட்டுப் போவதற்கும்

நெஞ்சமென்ற நினைவேட்டில்

      நிறையட்டும் மனிதநேயம்!

 
மீலாத வஞ்சனையால்

      மெய்வருத்தம் செய்வோர்க்கும்

ஊழலென்னும் ஊழ்வினையால்

      ஓய்வின்றி உழல்வோர்க்கும்

காலநேரம் பார்க்காது

      கையூட்டுப் பெறுபவர்க்கும்

நாளெல்லாம் மலரட்டும்

      நலமான மனிதநேயம்!

 

அலட்சியமாய் அவலத்தை

      அரங்கேற்றும் அருவருப்பாய்

இலட்சியங்கள் இல்லாத

      இரக்கமற்ற இழிபிறப்பாய்

இலக்கில்லாத் தட்சனையை

      இலகுடனே கேட்போர்க்கு

உளம்திருந்த ஒருவாய்ப்பாய்

            ஒளிரட்டும் மனிதநேயம்!

 
மலரட்டும் மலரட்டும்

      மனிநேயம்  மலரட்டும்

ஒழுக்கமின்றி விழுப்பமின்றி

      ஒழுங்கான நெறியுமின்றி

அழுக்கான மனத்தோடு

      அழல்கின்ற மாந்தரிடம்

மலரட்டும் மலரட்டும்

      மனிதநேயம் மலரட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக