புதன், 6 மே, 2015

நாளும் நன்மை புரிந்திடுவோம்
பிஞ்சு பாலைக் குருத்துகளும்
பிடித்த மான செங்கரும்பும்
மஞ்சள் கொத்தும் மாவிலையும்
மனைகள் தோறும் மணமணக்க
நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு
நன்றி சொல்லும் தைநாளில்
வஞ்ச மில்லா இயற்கையை
வாஞ்சை யோடு வணங்கிடுவோம்.

நல்ல நாளாம் தைப்பொங்கல்
நம்மை நாடி வந்ததால்
உள்ள மெல்லாம் உவகையோடு
உற்றார் உறவும் சேர்ந்துகொள்ள
எல்லை யில்லா இன்பங்கள்
இன்று போலக் கிடைத்திடவே
கள்ள மில்லா களிப்புடனே
கால மெல்லாம் வாழ்ந்திடுவோம்.

உள்ளத் தனைய உணர்வுகளை
ஒன்ற வைத்துப் போற்றிடவும்
வெல்லத் தினிய நினைவுகளை
வேண்டும் மட்டும் பெற்றிடவும்
இல்ல மெல்லாம் இருள்விலகி
இனிய காட்சி தெரிந்திடவும்
நல்ல எண்ணச் செயலோடு
நாளும் நன்மை புரிந்திடுவோம்.
                                   கணேசுகுமார் பொன்னழகு
                                   சிங்கப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக