பௌர்ணமி புன்னகை – அக்டோபர் 2024
உதிக்கின்ற
சூரியனைப் பூமியது சுற்ற
உருப்படியாய் ஓராண்டு ஆகுமெனக் கணித்தோர்
மதியென்னும்
முழுநிலவு பூமியினைச் சுற்ற
முப்பதுநா ளாகுமென முன்னறிந்தே உரைத்தார்
கதிரொளியை
உள்வாங்கி எதிரொளிக்கும் நிலவோ
கணிதவியல் கணக்கினிலே நாளொன்றாய் நகர்ந்தே
முதிர்வடையும்
காலத்தில் பூமிமுகம் பார்த்து
முழுமதியாய் முகம்காட்டி முன்னின்று சிரிக்கும்
வான்வெளியின்
மேற்றிசையில் வானவன்முன் நகர
வயல்வெளியில்
பயிரினமோ பசுந்தழையை ஆட்டும்
வான்வீதி
முகில்கூட்டம் பின்தொடர்ந்து செல்ல
வெண்மேகம்
சிவப்பேறி மெல்லமெல்ல கருக்கும்
வான்சோலை
வனத்தினிலே மையிருட்டும் நேரம்
வைரமணிக்
கற்களோடு முத்துகளும் சிதறும்
வான்பரப்பும்
மின்னொளியில் மின்மினியாய் மின்ன
வளர்ந்துவந்த
முழுமதியும் வட்டமுகம் காட்டும்
திரு கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக