வியாழன், 8 மே, 2025

 

சிங்கப்பூர் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு கவிமாலை நடத்தும் மரபு / பிற கவிதைப் போட்டிக்கு உரிய கவிதை. (முதல் பரிசு பெற்றது.) - ஏப்ரல் 2025

செய்நன்றி மறவாச் சிங்கைத் தாயே!

சீரென்னும் சிறப்பினையும் சிரத்தினிலே சூடி

சிங்கப்பூர் சீமையெனச் சிறந்தபெயர் பெற்றாய்!

ஊரென்னும் பேரினையும் உன்னிடத்தில் கொண்டே

உலகோர்தம் உள்ளமதில் ஒட்டுறவாய் நின்றாய்!

காரென்னும் மேகம்போல் கருணைமழை பொழிந்து

கடைக்கோடி மக்களுக்கும் கவலைநீங்க செய்தாய்!

பாரென்னும் பரப்பினிலே புள்ளியென வீற்றும்

பகைமையின்றிப் பாசமுடன் பற்றுறவு கொண்டாய்!

 

இளமையென்னும் ஊஞ்சலிலே இலங்குகின்ற போதும்

இரக்கமோடு இறைமையையும் இதயமதில் கொண்டாய்!

வளமையென்னும் இனிமையினை வழங்குகின்ற தாலே

வளர்ந்துவிட்ட நாடெனவே வையகத்தில் நின்றாய்!

விளம்பரங்கள் இல்லாது வீறுநடை போட்டு

விவேகமோடு வெற்றியையும் விருந்தெனவே ஏற்றாய்!

வளர்ச்சியென்னும் பாதையினை வகையாகக் கொண்டு

வருங்காலத் தலைமுறைக்கும் வாழ்வுதனைத்  தந்தாய்!

 

மெய்வருத்த உழைப்பவர்கள் மேன்மையுற்று வாழ  

மேதினியில் முதன்மைபெற்ற துறைமுகத்தைக் கொண்டாய்!

உய்வோடு உயர்வினையும் உறுதியாகத் தந்து   

ஊக்கமுடன் உலகோரை உன்பக்கம் ஈர்த்தாய்!

செய்நன்றி மறவாத செம்மையினைப் போற்றி

செந்தமிழை ஆட்சிமொழியில் ஒன்றெனவே ஏற்றாய்!

பொய்யின்றி மெய்யுரைக்கும் புண்ணியத்தைப் பெற்று

புவிப்பரப்பின் பூமகளாய்ப் புகழோங்கி நின்றாய்!

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக