ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"கடல் அலையில் தமிழ்"

காற்றடிக்கும் திசையெங்கும்
கலஞ்செலுத்தி வாழ்ந்தயினம்
வேற்றவரின் வேரறுக்க
விற்படையும் வாட்படையும்
வேற்படையும் தேர்படையும்
விதவிதமாய்க் கொண்டயினம்
போற்றுவோர்க்குப் பொன்னோடு
பொருள்களையும் தந்தயினம்

நம்நாட்டு வேந்தரினம்
நாடுபல பிடித்தபோது
தம்மறத்தின் தீரமோடும்
தடந்தோளின் பலமோடும்
நம்மொழியாம் நற்றமிழை
நிலைநாட்டி வாழவைக்க
வம்பேதும் செய்யவில்லை
வரம்புமீறிப் போகவில்லை

நாற்றிசையும் கடல்சூழ
நடுவினிலே யமைந்தநாடு
வேற்றுநாடும் வியந்துபார்க்கும்
விந்தைபல கொண்டநாடு
வேற்றினங்கள் புடைசூழ
வெற்றிகளைப் பெற்றநாடு
மாற்றினத்து மொழிகளையும்
மணிமுடியாய்க் கொண்டநாடு

வாய்மொழியாய்க் கொள்ளாமல்
வாழுகின்ற மொழியாகத்
தாய்மொழியாம் தமிழ்மொழியைத்
தமதரசில் ஏற்றநாடு
தாய்தந்த பாலாகத்
தமிழ்மொழியை யூட்டுவதால்
சேய்பெற்ற பலனாகச்
செந்தமிழும் வாழுதிங்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக