ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"பேச மறுக்கும் குருதிச் சுடர்"

கூடு விட்டு கூடு சென்ற
குருதி மாற்று அணுவால் தானே
வீடு நிறைந்து விருத்தி யாச்சு
வெறுமை மனதும் அமைதி யாச்சு
நாடு வாழ உழைக்கு மென்று
நம்பி நாளும் வளர்த்த பிள்ளை
கோடு போட்ட கட்டம் தன்னில்
கொள்கைக் குன்றாய் வளர்ந்த பிள்ளை

பத்து மாதம் சுமந்த பிள்ளை
பாசம் வைத்து வளர்த்த பிள்ளை
முத்து முத்தாய்ப் பேசும் பிள்ளை
முன்னோர் பெயரைக் காக்க யெண்ணிச்
சொத்து மீது நாட்ட  மின்றிச்
சொந்த மென்றே வாழ்ந்த பிள்ளை
மத்துக் கடைந்த வெண்ணெய் போலே
மனத்தைக் கொண்ட மாண்பு பிள்ளை

தாலி கட்டிப் போன பின்னே
தன்னைத் தானே மறந்த தாலும்
வேலி போல யிருந்த வுறவை
வெட்டி விட்டுப் போன தாலும்
காலில் விழுந்தும் கரையா நெஞ்சம்
கல்லின் தன்மை பெற்றார் போலே
பாலில் நஞ்சைக் கலந்தார் உள்ளம்
பேச மறுக்கும் குருதிச் சுடரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக