ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"சொல்லவொரு வார்த்தை யில்லை
சூடவொரு பூவு மில்லை
நல்லவுள்ள மிருந்த போதும்
நாடிவர யாரு மில்லை
தொல்லைபல ஏற்ற வுள்ளம்
தொலைந்துதான் போக வில்லை
கொல்லவரும் பகைவர் முன்னே
குனிந்துயென்றும் நின்ற தில்லை

குத்துவாளின் கூர்மை தன்னை
குறுஞ்சிரிப்பில் கண்ட போது
சத்தற்ற தேகம் கொண்டு
சடம்போலே சாய்ந்த தாலே
புத்திசொன்ன பெரியோர் சொல்லைப்
பொருட்டாக எண்ண வில்லை
கத்திகொண்டு வீசும் போது
கடுகளவும் பயந்த தில்லை

வேசமுற்றோர் பேசும் பேச்சை
வேதமாக எண்ணிச் சென்று
நாசமான பின்னே தானே
நல்லபுத்தி பெறுவ துண்டு
நேசம்கொண்ட நெஞ்சம் தன்னை
நினைப்பதற்கு யாரு மில்லை
பாசமற்று பார்ப்போர் கண்ணில்
பரிவென்றும் பிறப்ப தில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக