ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"ஆயுதம் இல்லா உலகில்"

இறைமீது கொண்டிட்ட
ஈடில்லா பக்தியாலே
கறைபடிந்த நெஞ்சினராய்க்
குமுகத்தில் சிலருண்டு

நிலமீது கொண்டிட்ட
நீண்டதொரு ஆசையாலே
நீசமனம் கொண்டோரும்
நிலப்பரப்பில் சிலருண்டு

மார்க்கமீது மதிப்புள்ளோர்
மாண்பற்ற போதனையில்
மதியிழந்து உழல்வோரும்
மண்மீது சிலருண்டு

வர்க்கமீது வாஞ்சையுள்ளோர்
வறுமையில்லா வாழ்வெண்ணி
வழிதவறிப் போவோரும்
வையகத்தில் சிலருண்டு

இனமீது கொண்டிட்ட
இணையில்லா இச்சையாலே
தனியரசு கேட்போரும்
தரணியிலே சிலருண்டு

அன்பில்லா ஆயுதத்தால்
அழிவைநாடி அடிவைத்து
வன்முறைக்கு இலக்காகி
வாழ்விழப்போர் சிலருண்டு

மேற்கண்ட சிலராலே
மேதினியில் தீர்வுவேண்டி
மேம்பட்ட செயலென்று
மரணத்தை உண்டாக்கும்

எண்ணத்தைத் தூண்டிவிட்டு
இழப்புகளை வரவேற்கும்
வன்மத்தார் கைகளிலே
விதவிதமாய் ஆயுதங்கள்

ஆயுதங்கள் தூக்குவதில்
யாருக்குப் பயனென்று
ஆய்ந்துநாம் பார்த்தாலே
அளப்பரிய உண்மைவரும்

நேயத்தை வளர்ப்பதற்கு
நெஞ்சமுள்ள மானிடரே
ஆயுதமற்ற உலகத்தை
அவனியிலே உருவாக்கி

அன்பென்னும் அரவணைப்பில்
அனவரையும் ஒன்றிணைத்து
துன்பமில்லா வாழ்வுதனைத்
தொடர்ந்துவரச் செய்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக