ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"பேயாவது பூதமாவது"

பிள்ளைக்குச் சோறூட்ட
பேயென்றும் பூதமென்றும்
பொல்லாதப் பொய்யோடு
புரட்டுகளும் சொல்லிடுவார்
கள்ளமில்லாப் பிஞ்சுகளின்
கருணைமிகு நெஞ்சத்தில்
பள்ளத்தை உருவாக்கிப்
பயம்கொள்ளச் செய்திடுவார்

காலில்லா கறுப்புருவம்
காற்றினிலே மிதந்துவந்து
ஆள்பிடிக்கும் எண்ணத்தில்
ஆவியாக அலையுதென்பார்
நாளெல்லாம் நடுநிசியில்
நாத்துருத்தி வருமுருவம்
வேலியோரம் வேம்பினிலே
விழிபிதுக்கி நிற்குதென்பார்

வெள்ளையாடை மேலுடுத்தி
விரித்துவிட்ட கூந்தலோடு
எல்லையிலே இருக்குமென்பார்
எரிவிளக்குத் தெரியுதென்பார்
மல்லிகையும் மரிக்கொழுந்தும்
மணம்பரப்பி மயக்குதென்பார்
மரணத்தை விளைவிக்கும்
மாயைதான் வந்ததென்பார்

கறுப்பான ஓருருவம்
கலையில்லாப் பேருருவம்
இருட்டினிலே வருமென்றும்
இளையோரைப் பிடிக்குமென்றும்
கருத்தில்லாக் கதைகளுக்குக்
கைகாலை முளைக்கவைத்து
வெறும்வாயை மென்றிடுவார்
வீரத்தையும் கொன்றிடுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக