ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

'சிங்கை மகனுக்குத் தாலாட்டு'

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

கண்ணேஎன் கண்மணியே
கறபகமே நீயுறங்கு
பொன்னேஎன் பொன்மணியே
பொற்பதமே நீயுறங்கு

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே நீயுறங்கு
பொன்னுறங்கு பூவுறங்கு
பொன்மணியே நீயுறங்கு

ஆராரோ ஆரிரரோ ...

கன்னித்தமிழ் நான்பாட
கண்ணயர்ந்து நீயுறங்கு
கண்ணயர்ந்து உறங்குமுன்நீ
கடக்கும்வழி கேட்டுறங்கு

ஆராரோ ஆரிரரோ ...

சிங்கையென்னும்ச சிறுநாடாம்
சீர்மைபல பெற்றநாடாம்
உங்கப்பன் தாத்தனோட
உழைப்பாலே உயர்ந்தநாடாம்

பிழைப்புநாடி வந்தவர்க்கும்
பிழைப்புகோடி தந்தநாடாம்
பிழையில்லா பெருமைகளைப்
பேருபெற்று வளர்ந்தநாடாம்

ஆராரோ ஆரிரரோ ...

உழைப்பைச் சுரண்டுகின்ற
ஊழலுமே இங்கில்லை
பிழைப்பைக் கெடுக்கின்ற
பித்தலாட்டம் இங்கில்லை

தண்ணீர்ப்  பிரச்சினையும்
தலைமேலே நிற்குதடா
தண்ணீர்ப் பிரச்சினையைத்
தகர்த்தெறிய தோள்கொடடா

ஆராரோ ஆரிரரோ ...

எல்லைப் பிரச்சினையும்
இன்றுவரை இருக்குதடா
எல்லைப் பிரச்சினையும்
இல்லாமல் நீசெய்யடா

சமயப் பிரச்சினையும்
சந்தில்வரப் பாக்குதடா
சமயப் பிரச்சினையும்
சத்தமின்றித் தீர்ப்பாயடா

ஆராரோ ஆரிரரோ ...

சிங்கையாம் நம்நாட்டில்
செந்தமிழும் தலைத்தோங்க
சங்கத்தமிழ் நீபாடிச்
சந்ததிக்கும் கற்றுக்கொடு

நல்லிணக்கக் கோட்பாட்டை
நாளைவரும் தலைமுறைக்கும்
நல்விதமாய்ச் சொல்லிவிடு
நல்லவராய் வளர்த்துவிடு

ஆராரோ ஆரிரரோ ...

பல்லினத்து மக்களோட
பண்பாட்டை மதிப்பதோடு
தொல்தமிழர் மரபினையும்
துலங்கும்படி செய்துவிடு

வந்தாரை வாழவைக்கும்
வாழ்வியலைக் கற்பதோடு
சொந்தபந்த சுற்றத்தோடு
சேர்ந்துவாழக் கற்றுக்கொடு

ஆராரோ ஆரிரரோ ...

செம்மாந்த இனமென்ற
சிந்தனையை வளர்பதோடு
நம்தமிழர் வளர்ச்சியிலே
நாளெல்லாம் உழைப்புகொடு

மண்சார்ந்த மரபுகளை
மனத்தினிலே பதிப்பதோடு
பண்பார்ந்த பணிவோடு
பழமையினை போற்றிவிடு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக