வியாழன், 11 ஏப்ரல், 2019


சிங்கப்பூரில் தமிழ்

வாசமுள்ள தமிழிது வசந்தத்தை தூவுது
நேசமுள்ள நெஞ்சில் நித்தமது வாழுது
பொன்னைப்போல் உயர்ந்த பழந்தமிழ் மொழியிது
கண்ணைப்போல் கருத்தாய்க் காலமெல்லாம் காத்திடு.
                                 (வாசமுள்ள தமிழிது ...)

சிங்கப்பூர் நாட்டில் சிறப்புடனே விளங்கும்
சிங்காரத் தமிழிது சிந்தையிலும் வாழுது
நால்வகை மொழிகள் நாட்டுக்காய் இருந்தாலும்
நாளெல்லாம் நாவினிலே நவின்றிடும் தமிழிது
     (வாசமுள்ள தமிழிது ...)

ஏதேதோ மொழிகள் இங்கிருந்த போதும்
வேதத்தின் வித்தாய் விளங்கிடும் தமிழிது
அன்போடு ஆறுதலும் அளித்திடும் மொழியிது
பண்போடு பாசத்தையும் பகர்ந்திடும் தமிழிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

வல்லோர்கள் தடுத்தும் வாடாத மொழியிது
நல்லோர்கள் கூடி நாட்டிட்ட தமிழிது
பள்ளிமுதல் வகுப்பினிலும் படித்திடும் தமிழிது
கல்லூரி காலம்வரை கட்டாய மொழியிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

எழுத்துக்கும் பொருள்கொண்டு இயங்கிடும் தமிழிது
இளையோரும் முதியோரும் இயம்பிடும் மொழியிது
உழைப்பாளர் சேர்ந்தே உயர்த்திட்ட மொழியிது
பழமையிலும் புதிதாய்ப் பிறந்திடும் தமிழிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

ஆண்டுக்கு ஒருமாதம் அளவில்லா நிகழ்ச்சிகளை
ஈண்டிங்குக் கொடுத்திடவே இசைந்திட்ட மொழியிது
ஆன்றோரும் சான்றோரும் அழகழகாய்ப் படைப்புகளை
ஈன்றெடுத்த மொழியிது சிங்கப்பூர்த் தமிழிது
                                 (வாசமுள்ள தமிழிது ...)

                           கணேசுகுமார் பொன்னழகு
                           சிங்கப்பூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக