வியாழன், 11 ஏப்ரல், 2019

"ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இங்கில்லை"

ஆணென்றும் பெண்ணென்றும்
           அவதரித்த பூமியிலே
மானிடரின் பிறப்பென்று
          மாறுபாடு கொண்டாலும்
ஊன்வேறாய் உடல்வேறாய்
          உலகோர்கள் பார்த்தாலும்
நான்பெரிது நீசிறிதென
          நாட்டாமை செய்யலாமோ

மண்போற்றும் மரபோடும்
          மானமிக்க மறத்தோடும்
அன்பிலே பேதமின்றி
           அரவணைத்து வாழ்ந்தயினம்
அன்றுமுதல் இன்றுவரை
            அதியமானும் ஔவையாரும்
கொண்டிருந்த நட்பினிலும்
            குறையேதும் கண்டதில்லை

மாநாய்க்கன் பெற்றவளாம்
             மதுரையினை எரித்தவளாம்
வானுயர்ந்த செங்கோலை
             வளைந்திடச் செய்தவளாம்
கோனுக்கு முன்னின்று
             குற்றத்தைச் சுட்டியவள்
மாண்புபல பெற்றவனை
             மதிகெட்ட மன்னனென்றாள்

வேண்டாத வெள்ளையரை
            வேரறுக்க  விழைந்திட்ட
வீரமங்கை வேலுநாச்சி
           ஆணுக்கு நிகர்பெண்ணும்
அரசாள முடியுமென்ற
            ஆணையினை யிட்டவள்போர்
ஆயுதம்தா னேந்தியவள்
             சேனைக்கு முன்னின்று
சிங்கமெனச் சீறியவள்

பெண்ணென்றும் ஆணென்றும் 
             பிரிவினிலே பேதமற்ற
பண்பாட்டு வாழ்வியலைப்
             பாமரனும் அறிந்திடவும்
எண்ணில்லா சான்றுகளை
             எடுத்துரைத்து விளக்கிடவும்
முன்னோர்கள் படைத்தளித்த
             முத்தமிழும் இருக்கிதிங்கே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக