திங்கள், 29 ஏப்ரல், 2019

"என் கல்லறையில்..."

இந்தப் புவியில் பிறந்த மனிதன்
இறுதி வாழ்வை முடிக்கும் போது
வந்த நோக்கம் முடிந்த தென்று
வாழும் மனிதன் சொல்லக் கேட்டுச்
சொந்த மென்றும் பந்த மென்றும்
சொல்லிக் கொள்ளும் உற்றார் உறவும்
எந்த வழியும் ஏற்ப தில்லை
ஏற்ற வழியில் நடப்ப தில்லை

உடலும் உயிரும் பிரிந்த பின்னே
உலக வாழ்வு நிலைப்ப தில்லை
உடையோர் உள்ளம் வாடு மென்று
ஒட்டி வைத்துப் பார்ப்ப தில்லை
பட்டுத் துணியில் போர்த்தி வைத்துப்
பலநாள் பாது காப்ப தில்லை
கட்டி வைத்த கல்லின் அறையில்
காலம் முழுதும் இருப்ப தில்லை

பெற்றோர் உற்றோர் யாரு மற்று
பிரிந்து செல்லும் நேரம் வந்தால்
பற்று நீங்கிப் பரிவு பிறக்கும்
பார்ப்போர் நெஞ்சம் பதறித் துடிக்கும்
வற்றா குளமும் வாய்க்கால் வரப்பும்
வாழ்வில் சேர்த்து வைத்த வளமும்
கற்ற கல்வி பெற்ற செல்வம்
காடு தாண்டிச் செல்வ தில்லை

போகும் பாதை போலி யென்றும்
புதிய வாழ்வு தேவை யென்றும்
ஆகும் வழிகள் உரைத்த போதும்
அச்ச மின்றி வாழ்ந்த மனிதன்
சாகும் போது சொல்லும் சொல்லே
சான்றோர் ஆன்றோர் உரைத்த சொல்லாம்
வேகும் கட்டை வெல்வ தில்லை
வெற்றுப் பேச்சு நிலைப்ப தில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக